Breaking News

ஒரு தவறை காண்பித்து இன்னுமொரு தவறை நியாயப்படுத்தலாமா ? சட்டத்தரணிகள் எதற்கு ?

ஒரு விடயத்தை தீர்மானிக்கும்போது, ஒன்றாக உள்ளே இருந்து அதற்கு ஆதரவு வழங்கிவிட்டு, பின்பு வெளியே கட்சித் தீர்மானத்துக்கு எதிராக நடந்துகொள்கின்றபோது எழுகின்ற விமர்சனங்களை சமாளிப்பதற்காக பொதுவாக எல்லோரும் கூறுகின்ற பதில்தான் “”நான் சமூகத்துக்காக நல்ல விடயங்களுக்கு மனச்சாட்சிப்படி ஆதரவு வழங்கினேன்”” என்பதாகும்.


இதனை சொஹரா மாத்திரம் புதிதாக கூறவில்லை. கடந்தகாலங்களில் கட்சித் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்ட அனைவரும் கூறியது இதனைத்தான். 


வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பு கொழும்பு மாநகரசபை பட்ஜெட்டில் எவ்வாறு நடந்துகொள்வது என்று முஸ்லிம் காங்கிரசின் தலைவர் தலைமையில் தாருஸ்ஸலாமில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்த்து வாக்களிப்பதென்று சொஹராவும் சேர்ந்து தீர்மானித்துவிட்டு, தற்போது மக்களின் நலனுக்காக மனச்சாட்சிப்படி வாக்களித்தேன் என்று மனச்சாட்சி உள்ள எவரும் கூறமாட்டார்கள்.


தனிப்பட்ட ரீதியில் மனச்சாட்சிப்படி முடிவு எடுப்பதென்றால், சுயேச்சையாக தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்று அவ்வாறு முடிவெடுக்கலாம். ஆனால் ஒரு கட்சியின் சார்பாக போட்டியிட்டு உறுப்பினராக தெரிவானால் அந்த கட்சிக்கு கட்டுப்பட்டு நடத்தல் வேண்டும்.


நாட்டின் பல உள்ளூராட்சி சபைகளில் NPP க்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியுள்ளது. கொழும்பு மாநகர சபைக்கும் ஆதரவு வழங்குவதென்றால் குறுக்கு வழியில் செல்லாமல் முறையாக அணுகியிருந்தால், எல்லோரும் கூடி தீர்மானித்திருக்கலாம். ஆனால் முறை தவறி குறுக்குவழியில் ஒரு உறுப்பினரை விலைக்கு வாங்கியதானது தவறான நடைமுறையாகும். 


இருபதுக்கு வாக்களித்தவர்களுக்கு மன்னிப்பு வழங்க முடியுமென்றால், ஏன் எனக்கு முடியாது என்ற கேள்வியானது, ஒரு தவறை சுட்டிக்காட்டி இன்னுமொரு தவறை நியாயப்படுத்த முற்படுவதாகும். இருபதுக்கு வாக்களித்ததும் தவறு, இதுவும் தவறு. 


இருபதுக்கு வாக்களித்தவர்களுக்கு கோரப்பட்ட விளக்க கடிதத்துக்கு உரிய காலத்துக்கு முன்பே அவர்கள் பதிலளித்தார்கள். ஆனால் தனது கட்சி கோரிய விளக்கத்துக்கு சொஹரா அவர்கள் உரிய காலத்துக்குள் பதிலளிக்காமல், காலம் கடந்த பின்பு சட்டத்தரணிகளுடன் சென்றது எதற்கு ? 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments