அன்று மாணிக்கமடுவில் ஹக்கீம், இன்று திருமலையில் அருன். என்ன புரிகிறது ?
நல்லாட்சி அரசாங்க காலத்தில் 29.10.2016 இல் இறக்காமம் மாணிக்கமடு பிரதேச மலையின்மேல் சிலை வைக்கப்பட்டது. இது ஹக்கீமின் எதிரிகளுக்கு பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல் இருந்தது. இத்தனைக்கும் மலையை சுற்றியுள்ள காணிகளில் பெரும்பாலும் தமிழர்களுக்குரியது.
அன்றைய அமைச்சர் ரவுப் ஹக்கீம் கொழும்பிலிருந்து விமானத்தில் வந்து சிலை வைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டபின்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சிலையை அகற்றும்படி வழங்கிய அழுத்தத்துக்கு அமைவாக, இரண்டு வாரங்களில் சிலை அகற்றப்படுமென்று பிரதமர் ரணில் வாக்குறுதி வழங்கினார்.
பிரதமரின் வாக்குறுதியை நம்பித்தான் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் ஊடகம் “”இரண்டு வாரங்களில் சிலை அகற்றப்படும்”” என்ற செய்தியை வெளியிட்டிருந்தது. ஆனால் இதுவரையில் அது அகற்றப்படவில்லை.
ரணில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக சிலை அகற்றப்பட்டிருந்தால், அன்றோடு அவரது பிரதமர் பதவி காலாவதியாகி இருக்கும். இந்த நாட்டின் எந்த மூலையிலாவது வைக்கப்பட்ட சிலைகள் ஒருபோதும் அகற்றப்பட முடியாது என்ற உண்மையை மாணிக்கமடு விடயத்தில்தான் ரணில் உணர்ந்திருப்பார்.
அன்று ரணில் உணர்ந்த விடயத்தைத்தான் இன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் திருகோணமலை விடயத்தில் உணர்ந்துள்ளார்.
மாணிக்கமடு விடயத்தில் கண்டி மாவட்ட பிரதிநிதியான ரவுப் ஹக்கீம் மாத்திரம் அவரது எதிரிகளால் விமர்சிக்கப்பட்டதானது அரசியல் நோக்கம் கொண்டது. ஏனெனில் அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளோ, வேறு முஸ்லிம், தமிழ் அமைச்சர்களோ விமர்சிக்கப்படவில்லை.
ஆனால் இன்றைய நிலைமை அவ்வாறில்லை. திருகோணமலையில் சிலை வைப்பு விடயத்தில் அம்மாவட்ட மக்கள் பிரதிநிதியான அருண் மாத்திரம் விமர்சிக்கப்படவில்லை, மாறாக ஜனாதிபதி உட்பட முழு ஆட்சியாளர்களும் விமர்சிக்கப்படுகின்றனர்.
வடக்கு கிழக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்புக்கு இடமில்லையென்றும், சமத்துவம் பேசியும் ஆட்சிக்கு வந்த இன்றைய இடதுசாரி அரசாங்கமானது, தற்போது நாட்டின் உண்மை நிலவரத்தை உணர்ந்துள்ளதுடன், சிக்கல் நிறைந்த இந்த விவகாரத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக காயை நீதிமன்றம் பக்கமாக திருப்பியுள்ளனர்.
2005 இல் விடுதலை புலிகள் பலமாக இருந்த சமாதான காலத்தில் திருகோணமலை நகரத்தில் சிலை வைக்கப்பட்டபோது அதற்கு எதிராக விடுதலை புலிகள் மாத்திரமல்லாது பொது மக்கள் பாரிய எதிர்ப்பினை தெரிவித்து தொடர் ஹர்த்தால்களை மேற்கொண்டனர். விடயம் நீதிமன்றத்துக்கு சென்றதுடன், சிலையை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் சிலை அகற்றப்படவில்லை.
தற்போது திருகோணமலை விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. சிலநேரம் சிலையை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டால், அது நடைமுறைப்படுத்தப்படுமா ?
எது எப்படியிருந்தாலும் தேரோக்களை பகைத்துக்கொண்டு இவ்வாறான விடயங்களில் எந்த ஆட்சியாளர்களினாலும் அதிகாரத்தை பயன்படுத்து முடியாது என்பது மாத்திரம் புரிகிறது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments