இஸ்ஹாக் அவர்களின் 30 வருட அரச சேவைக்கு கல்முனை மாநகர சபையில் அளிக்கப்பட்ட கௌரவம்.!
(அஸ்லம் எஸ். மெளலானா)
கல்முனை மாநகர சபையில் நிதி உதவியாளராகக் கடமையாற்றிய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரான யூ.எம். இஸ்ஹாக் அவர்கள் தனது 30 வருட கால அரச சேவையில் இருந்து இன்று 2025.08.19 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றுள்ளார்.
இதனை முன்னிட்டு கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விஷேட சேவை நலன் பாராட்டு விழா நேற்று திங்கட்கிழமை (18), மாநகர சபை கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கல்முனை மாநகர சபையின் கணக்காளர் ஏ.எஸ். மனாஸிர் அஹ்சன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.
அத்துடன் கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், ஆயுள்வேத வைத்திய அதிகாரி ஜுமானா ஹஸீன் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டதுடன் சட்டத்தரணி சி.எம்.ஏ. ஹலீம், மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன், சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் ஏ.எம். டிலிட் நெளசாட், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ரஜனி சயானந்தன், எஸ். சுபாஷினி, எம்.வை. சாஹிதா உள்ளிட்டோர் யூ.எம். இஸ்ஹாக் அவர்களின் 30 வருட கால அரச பணியின் உன்னத சேவைகளை சிலாகித்து உரையாற்றினர்.
இதன்போது கல்முனை மாநகர சபையின் அனைத்துப் பிரிவுகள் மற்றும் துணை அலகுகள் சார்பிலும் யூ.எம். இஸ்ஹாக் அவர்கள் நினைவுப் பரிசுகள் வழங்கி, பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் வாழ்த்துப் பாக்களும் கையளிக்கப்பட்டன.
கல்முனை மாநகர சபையின் பொதுவான கெளரவிப்பு நினைவு விருது மற்றும் வாழ்த்துப்பா என்பவற்றை ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்கள் வழங்கி வைத்து, பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
கல்முனை மாநகர சபையின் வருமானப் பரிசோதகர் சமீம் அப்துல் ஜப்பார் விழா நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை பிரதேசத்தை சேர்ந்த யூ.எம். இஸ்ஹாக் அவர்கள், தேசிய பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிராந்திய செய்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments