புத்தளம் திறந்த பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்.
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் திறந்த பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் அண்மையில் (10) புத்தளம் இபுனு பதூதா ஞாபகார்த்த (ஐ.பீ.எம்) மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் என்.நிலோபர் அவர்களும், கெளரவ அதிதியாக சர்வதேச இளைஞர் மன்றத்தின் நிறைவேற்று அதிகாரி சதாம் திக்ரான் சாஜஹான் அவர்களும், சிறப்பு அதிதிகளாக கவிஞர் எஸ்.ஏ.சீ.பீ.மரிக்கார், சமூகவியலாளர் இஷாம் மரிக்கார், புத்தளம் திறந்த பல்கலைக்கழகத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஜிப்ரி, புத்தளம் ஆசிரியர் பயிற்சி நிலையத்தின் ஓய்வு பெற்ற முகாமையாளர் எம்.எச்.எம். நவாஸ் உள்ளிட்ட புத்தளம் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், இளங்கலை பட்டதாரிகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வு சுய பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்டதோடு, நிர்வாகக் குழு தலைவரால் வரவேற்புரை வழங்கப்பட்டது. தொடர்ந்து, கற்கை நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஜிப்ரி தலைமை உரையாற்றினார்.
அதன் பின்னர், நிர்வாகக் குழு செயலாளரால் வருடாந்த அறிக்கையும், பொருளாளரால் கணக்கு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டதோடு, புத்தளம் திறந்த பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரிகள் சங்க உறுப்பினர்களால் அவை ஆமோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பிரதம அதிதி என். நிலோபர் உரை மூலம் கல்வியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டதோடு, சிறப்பு அதிதியான சதாம் திக்ரான் சாஜஹானினால், மாணவர்களின் சமூக பங்களிப்பு, கல்வி மற்றும் உலகளாவிய இளைஞர் முன்னேற்றங்கள் குறித்து முக்கியமான கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டமை முக்கிய அம்சமாகும்.
பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளுக்கான நினைவுச் சின்னங்களும் இதன் போது வழங்கப்பட்டதோடு, புத்தளம் கற்கை நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜிப்ரியின் இணையற்ற சேவையை பாராட்டும் முகமாக புத்தளம் திறந்த பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரிகள் சங்கத்தினால் நினைவுச் சின்னமொன்று வழங்கி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
அத்தோடு திறந்த பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரிகள் சங்கத்தின் இவ்வாண்டிற்குரிய சிறந்த உறுப்பினரான டீ. அஸ்விதனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டதோடு, குறித்த ஆண்டில் பணியாற்றிய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு அவர்களது சேவையை பாராட்டி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதையடுத்து, வாக்கெடுப்பின் மூலம் புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு, புத்தளம் திறந்த பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரிகள் சங்கத்தின் புதிய தலைவரினால் எதிர்கால திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
No comments