Breaking News

முஹர்ரம் புது வருட தேசிய நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொழும்பு 02, கொம்பனித்  தெருவில் அமைந்துள்ள வேகந்த ஜும்ஆப் பள்ளிவாசலுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட முஹர்ரம் (ஹிஜ்ரி 1447/2025) இஸ்லாமிய புதுவருட நிகழ்வு கொழும்பு வேகந்த ஜும்ஆப்  பள்ளிவாசலில் (27) நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.


முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய நல்லிணக்க பிரதியமைச்சர் முனீர் முழப்பர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். 


இந்நிகழ்வில், அல்ஹாபிழ் செய்ட் றிஸ்வி அல்குர்ஆன் ஓதியதோடு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தலைமை உரையாற்றினார்.


ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் மௌலவி அர்கம் நூராமித் இஸ்லாமியப் புதுவருட முஹர்ரம் சிறப்புகள் குறித்து தமிழ் மொழியிலும் கொம்பெனித் தெரு அஹதிய்யாப் பாடசாலை மாணவன் முஹம்மட் சாபித் றிஸ்வான் சிங்கள மொழியிலும் உரையாற்றினர்.


கொம்பெனித் தெரு அஹதிய்யாப் பாடசாலையின் மாணவர்களான அஸ்மிர் அஹமட் சுபைர், முஹம்மட் சாஹிர் நஸார், முஹம்மட் யஹ்யா இம்ரான் ஆகியோரினால் கஸீதா பாடப்பட்டதுடன் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.


வேகந்த ஜும்ஆப் பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் அல்ஹாஜ் நிஸாம் நயீமினால் நிகழ்வில் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.


துஆ மற்றும் ஸலவாத்தினை வேகந்த ஜும்ஆப் பள்ளிவாசலின் பேஷ்இமாம் அல் - ஆலிம் எம். நஸீர் புஹார்தீன் (நஜாஹி) நிகழ்த்தினார்.


இந்நிகழ்வில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், என்.நிலூபர்,  திணைக்கள நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் அஷ்ஷேக் முப்தி முர்சி, திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். மிஸார் உட்பட உலமாக்கள் மற்றும்  திணைக்களத்தின் அதிகாரிகள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், ஊர் ஜமாஅத்தினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.












No comments