Breaking News

கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்று வழங்கிய இரட்டைத் தீர்ப்புகள் தொடர்பில் உயர் நீதிமன்றம் தடை உத்தரவு.

13.07.2023 அன்று ஒரு வழக்கில் (CHC /408/21) ஒரே நாளில் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் வழங்கிய இரண்டு முரண்பட்ட தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. வழக்கு எண் SC(HC).LA  No.100/23 இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் யசந்த கோதாகொட , சம்பத் அபயகோன் மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய  அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


சட்டத்தரணிகள் சல்மான் அமீன், நப்ரத் நஜ்முதீன் மற்றும் ஷிஃபான் முத்தலிப் ஆகியோருடன் மனுதாரர் சார்பில் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் மன்றில் தோன்றி சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தார். 


வர்த்தக மேல் நீதிமன்றம் வழங்கிய முதலாவது தீர்ப்பு சட்டப்படி குறைபாடுடையது என்றும் நீதிபதி சட்டத் தவறு(error in law)  செய்துள்ளார் என்பதுடன் தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன்,  நீதிபதி செயல்பாட்டு அதிகாரியாக செயற்பட முடியாது ( functus officio) எனவே அடுத்தடுத்து மாற்றுத் தீர்ப்புகளை வழங்கியமை குடியியல் சட்ட  நடபடிமுறையை மீறிய செயல் என அவர் வாதிட்டார்.


இரண்டாவது தீர்ப்பு சட்ட அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு (ultra vires) வழங்கப்பட்டது என்றும், ஒரே வழக்கில் இரண்டு முரண்பட்ட தீர்ப்புகள் சட்ட உறுதிப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி, மனுதாரருக்கு  பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் வாதிடப்பட்டது.


சமர்ப்பணங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், உயர் நீதிமன்ற அமர்வு மேன்முறையீடு செய்ய அனுமதி அளித்ததுடன் குறித்த வழக்கு தொடர்பில் கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றத்தின் அனைத்து  நடவடிக்கைகளுக்கும் தடை விதித்தது. வழக்கேடுகளின் மூலப்பிரதியை உடனடியாக உயர் நீதிமன்றத்திற்கு மறுஆய்வுக்காக அனுப்புமாறு வர்த்தக மேல்  நீதிமன்றத்தின் பதிவாளருக்கு மன்று உத்தரவிட்டது.


இந்த வழக்கு 09.10.2023 அன்று முழுமையான விவாதத்திற்கு  ஒத்திவைக்கப்பட்டது.




No comments