Breaking News

கட்சியை தோற்கடிப்பதற்காக உழைத்த துரோகிகளுக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்குமா ?

நடந்துமுடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் பின்னடைவுக்கு காரணம் கட்சியின் பிரமுகர்களே தவிர, கட்சிக்கு வெளியே உள்ள எவரும் காரணமல்ல. 


ஏனெனில் கட்சிக்கு வெளியே உள்ளவர்கள் தொடர்ந்து விமர்சித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் எதிரிகள் ஆனால் உள்ளே இருந்துகொண்டு தங்களுக்கு வாசி இல்லாவிட்டால், சுயநலனுக்காக கட்சியை தோற்கடித்தவர்கள் துரோகிகள். இந்த துரோகிகளை வெளிப்படுத்துவதுடன், அவர்களுக்கு எதிராக கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே ஒவ்வொரு ஊராக சுருக்கமாக அலசி ஆராய்ந்து இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளேன்.   


பாலமுனை 

----------------------

அட்டாளைசேனை பிரதேச சபையில் உள்ளதுதான் பாலமுனை கிராமமாகும். இங்கு உள்ள இரண்டு வட்டாரங்களிலும் மு.கா தோல்வியடைந்தது. அங்குள்ள மு.கா பிரமுகரை அட்டாளைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் வேட்பாளராக பிரகடனப்படுத்த வேண்டுமென்ற நிபந்தனையை கட்சி ஏற்றுக் கொள்ளாததன் காரணமாக, வேட்பாளராக களமிறங்க மறுத்துவிட்டு முஸ்லிம் காங்கிரசை தோல்வியடைய செய்வதற்காக மறைமுகமாக உழைத்தார். 


அவ்வாறு அவரை தவிசாளராக பிரகடனப்படுத்தியிருந்தால் ஒலுவில், அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களின் வாக்குகளில் சரிவு ஏற்படும் என்ற காரணத்தாலேயே அவ்வாறு அவரை பிரகடப்படுத்த முடியவில்லை. 


சம்மாந்துறை 

--------------------------

சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியடையும் என்பது வேட்புமனு பத்திரம் தாக்கல் செய்தபோது உறுதிப்படுத்தப்பட்டது. 


சம்மாந்துறை பிரதேச சபையின் வெற்றியை உறுதி செய்வதற்கு அங்குள்ள முக்கிய பிரமுகரை கட்சியில் இணைப்பதற்கான நடவடிக்கை பூர்த்தியான நிலையில், தலைவர் கொழும்பிலிருந்து சம்மாந்துறைக்கு வந்துகொண்டிருந்தபோது வேட்புமனு பத்திரம் ஒருதலைப்பட்சமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதென்ற தகவலை பதியதலாவை பிரதேசத்தால் வரும்போது தலைவர் அறிந்தார். பின்பு இடைநடுவினிலேயே தனது வாகனத்தை திருப்பிக்கொண்டு சம்மாந்துறைக்கு வராமல் மீண்டும் தலைவர் கொழும்புக்கு திரும்பினார்.  


கட்சிக் கட்டுப்பாடு அங்கு இல்லை. அத்துடன் போட்டியிட்ட வேட்பாளர்களுல் சட்டத்தரணி ஜஹ்பிர் ஒரு சீனியர். அரசியல் அனுபவமுள்ளவர் அவரை தவிசாளர் வேட்பாளராக அறிவித்திருந்தாலும் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். 


கடந்த பொது தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுக்காக இரவு பகலாக உழைத்த ஹத்தீக் இப்ராஹீமுக்கு போட்டியிட சந்தர்ப்பம் வழங்கியிருக்கலாம். அதிலும் வெட்டுக் குத்து. மொத்தத்தில் வெற்றிபெற வேண்டிய சபையை தனிநபரின் சுயநலனுக்காக தோல்வியடைய செய்ததுடன், கட்சியும் அங்கு அழிந்துவருகின்றது. 


மாவடிப்பள்ளி 

--------------------------

காரைதீவு பிரதேச சபைக்குள் அடங்குகின்ற ஒரு வட்டாரத்தைக் கொண்ட மாவடிப்பள்ளியில் மு.கா தோல்வியடைந்தது. அங்கு இருந்த பிரமுகர் நான்தான் அமைப்பாளராகவும், வேட்பாளராகவும் இருக்க வேண்டுமென்ற பிடிவாதத்தினால் இரண்டையும் வெவ்வேறு நபர்களுக்கு பகிந்ர்துகொள்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை. இதனால் வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நேரத்தில் ஒழிந்துவிட்டார். அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளரை தோற்கடிப்பதற்காக வேலை செய்தார்.  


இவ்வாரானவர்களைத்தான் கட்சியின் காவலர்கள் என்றும், போராளிகள் என்றும், கட்சி பிரமுகர்கள் என்றும் இன்னமும் சிலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். 


இவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் கட்சியை பலப்படுத்த முடியாது. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments