JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கொழும்பு முகத்திடலில் 77 வது சுதந்திர தின நிகழ்வுகள்.

எம்.யூ.எம்.சனூன்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தலைமையில் புத்தளம் மாவட்ட செயலகம் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்கு பற்றுதலுடன் புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது.


"தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்" என்பது இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தின் தொணிப்பொருளாகும்.


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கு பற்றுதலுடன் இந்நிகழ்வுகள் இனிதே நடந்தேறின.


ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜானக தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கயான ஜானக எம்.பி.அவர்களை புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தேசிய கொடியை ஏற்றி வைக்க அழைத்து வந்தார்.


மறைந்த தேசிய வீரர்களுக்கு ஒரு நிமிட நேரம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.


ஆனமடு, கருவலகஸ்வெவ, மஹாகும்புகடவல மற்றும் புத்தளம் கலாச்சார மத்திய நிலைய மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.


புத்தளம் சென் அன்றூஸ் பாடசாலை மாணவர்கள் தேசிய கீதம் இசைக்க புத்தளம் ஆனந்தா தேசிய பாடசாலை மாணவர்கள் தேசிய மறுமலர்ச்சி ஆசீர்வாத பாடலை இசைத்தனர்.


பிரதான உரையினை புத்தளம் மாவட்ட செயலாளர் ஹேரத் வழங்கினார். புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.கயான் ஜானக, முஹம்மது பைசல் ஆகியோரும் உரையாற்றினர்.


இந்த 77 வது சுதந்திர தின வைபவ நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், சமய தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், கல்வியியலாளர்கள், முப்படைகளின் உயர் அதிகாரிகள், புத்தளம் நகர சபையின் அதிகாரிகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.























Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال