JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் நாவற்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் மாணவர்கள் கௌரவிப்பு!.

எம்.யூ.எம்.சனூன், எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் நாவற்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் கார்த்திகைத் திங்கள் 21 ஆம் திகதி வியாழக்கிழமை அன்று அதிபர் பா.ஜெனற்ராஜ் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில், இணைப்பாட விதான செயற்பாடுகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இறையாராதனை மற்றும் மங்கள தீபம் ஏற்றலுடன் ஆரம்பமானது. 


முதல் நிகழ்வாக அதிபரினால் வரவேற்புரையும் தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டது. 


இந்நிகழ்வுக்கு  கல்விப்புலத்தில் சிறப்பாக பணி செய்து பணி நிறைவு பெற்ற புத்தளம் வலயக்கல்விப்பணிமனையின் தமிழ் பிரிவின் உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.அபுல் ஹுதா, ஆசிரிய ஆலோசகர்களான திருமதி எஸ்.வக்சலா நாகராஜ், எம்.எச்.எம்.நவாஸ், ஏ.டி.எம்.நிஜாம், எம்.எம்.ஜாபீர், அயற்பாடசாலையின் அதிபர்கள், ஊரில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள், கிராமத்திற்குப் பொறுப்பான கிராம அதிகாரி, அபிவிருத்தி உத்தியோகத்தர் பெற்றோர் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


அத்துடன் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்மொழித்தினம், ஆங்கில தினம், சிங்கள தினம், சமூக விஞ்ஞான போட்டி, கலாசாரப்போட்டி என்பவற்றில் பாடசாலைமட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 


அது மட்டுமல்லாமல் மாகாண மட்டத்தில் முதல் இடம் பிடித்த பிரிவு 1 இசையும் அசைவும், மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்த இலக்கிய நாடகம் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.


மேலும் இப்போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்திய ஆசிரியர்களான திருமதி ஏ.ஆர்.எம்.ஏ.வினோஜினி மற்றும் திருமதி ஜீ.பீ.ஏ.பிறிஸ்கா ஆகியோருக்கு பெற்றோர் சார்பில் அன்பளிப்புக்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.


அத்துடன் ஆங்கிலக் கவிதை,சிங்களப்பேச்சு, நாட்டார் பாடல், இலக்கிய நாடகம் என்பன இந்நிகழ்வை  மேலும் மெருகூட்டின. 


அத்துடன் 21 ம் திகதி அன்று அதிபர் பீ. ஜெனற்ராஜ் பாடசாலைக்கு வருகை தந்து 8 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.அதிபர் அவர்கள் கடந்து வந்த பாதையானது ஆரம்ப காலத்தில் பாரிய சவால்களைச் சந்தித்து அவரது சிறந்த தலைமைத்துவம் வழிகாட்டல் அயராத முயற்சி என்பவற்றினால் இப்பாடசாலையானது தற்பொழுது பலரும் திரும்பிப்பார்க்கின்ற ஒரு பாடசாலையாக மாறியுள்ளது. 


இந்நாளின் நினைவாக இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் உள்ளடங்கிய ஓர் கையேடும் வழங்கப்பட்டது. 


அத்துடன் பெற்றோர் சார்பில் எம்.கிரேசன் அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.





















Previous Post Next Post

نموذج الاتصال