JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸாக்களை எரிக்க தீர்மானம் எடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் : சுதந்திர போராட்ட முஸ்லிம் வீரர்களை வர்த்தமானியில் அறிவிக்க வேண்டும் - ஹரீஸ் எம்.பி பாராளுமன்றத்தில் கோரிக்கை !

நூருல் ஹுதா உமர்

கொரோனா தொற்றுக்காலத்தில் முஸ்லிங்களின் மார்க்க ஒழுங்கின்படி நல்லடக்கம் செய்ய வேண்டிய ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டது. உலகின் சகல பாகங்களிலும் அந்த காலத்தில் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுக்கொண்டிந்தபோது இலங்கையில் மட்டும் இந்த ஜனாஸாக்களை எரிக்க தீர்மானம் எடுத்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள், அரச உயர்மட்டத்தினர், பின்னணியில் இருந்தவர்களை குற்றப்புலனாய்வு பிரிவினரை கொண்டு விசாரணை செய்து இப்படியான தீர்மானம் எடுத்தமைக்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். அத்துடன் நமது நாட்டின் விடுதலைக்காக, சுதந்திரம் பெறுவதற்காக பலரும் உயிர்த்தியாகம் செய்து சிறைகளில் வாடி ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார்கள். அதில் சிலர் ஆங்கிலேய ஆட்சியாளர்களினால்  தேசத்துரோகிகளாகவும் அறிவிக்கப்பட்டார்கள். என்னுடைய கல்முனை தொகுதியிலையே ஈஸா அனீஸ் லெப்பை, காரியப்பர் போன்றவர்கள் உட்பட இன்னும் ஐந்து சகோதரர்கள் அவர்களினால் துரோகிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.


இதில் சிலரை மட்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரோகிகள் பட்டியலில் இருந்து விடுவித்து தேசப்பற்றாளர்களாக அரச வர்த்தமானியில் அறிவித்திருந்தார். அதில் இந்த ஏழு முஸ்லிம் சகோதரர்களும் உள்ளடக்கப்படவில்லை. நாம் எல்லோரும் நமது தேசத்தின் மேம்பாட்டுக்காக பாடுபடும் இந்த சூழ்நிலையில் இந்த விடயத்தையும் ஜனாதிபதியும், அரசாங்கமும் கவனத்தில் எடுத்து இந்த ஏழு சகோதரர்களையும் துரோகிகள் பட்டியலில் இருந்து நீக்கி தேசப்பற்றாளர்களாக அறிவித்து வர்த்தமானியில் அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.- என்றார்





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال