JobVibe.lk - Sri Lanka Job Portal

அரசியலமைப்பு முன்மொழிவு ஆவணம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு கையளிப்பு.

மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கத்தின் அழைப்பாளர்களான சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் ஆகியோர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமை திங்கட்கிழமை (12) கட்சியின் “தாருஸ்ஸலாம் “ தலைமையகத்தில் சந்தித்து அரசியலமைப்பு முன்மொழிவு ஆவணமொன்றை கையளித்துக் கலந்துரையாடினர். அதற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் வேண்டிக்கொண்டனர்.


அதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,


மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தலைமையிலான  சிவில் சமூக இயக்கத்தினர் எங்களை சந்தித்து,தற்பொழுது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் இருக்கிற சமன்பாட்டில் என்ன பிரச்சினைகள் இருந்தாலும்,  பாராளுமன்றத்தில் இருக்கிற அரசியல் தலைமைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டாக முயற்சி செய்தால் நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றிற்கான தீர்வுகளையும் ஒரு தேர்தல் வரும்வரை காத்திருக்காமல் முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு முயற்சியை செய்வதற்கு இது  நல்ல வாய்ப்பாக இருக்கும் என்ற அடிப்படையில் அதற்கான  பொறிமுறை ஒன்றை அவர்கள் எங்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார்கள்.


எனவே அந்த பொறிமுறையின் அடிப்படையில் செயல்படுவதற்கு நாங்கள் எத்தனிப்பது நல்லது என்ற அபிப்பிராயத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதனடிப்படையில் சில முயற்சிகளை செய்து பார்க்கலாம் என்றிருக்கிறோம்.


ஜனாதிபதி அடுத்த 75வது சுதந்திர தினத்திற்கு முன்பாக நாட்டின் இனப் பிரச்சினைக்கான தீர்வு ஒன்றை நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் கொண்டு வருவதற்கு தான் தயாராகவிருப்பதாக சொல்லியிருக்கிறார். அதற்கான முயற்சிகளை எவ்வாறு செய்வது என்பது சம்பந்தமாக கதைப்பதற்கான எந்த சந்தர்ப்பமாக இருந்தாலும் ,குறுகிய காலம்தான் இருக்கின்ற போதிலும் இருக்கின்ற அரசியலமைப்பின் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காவது  அரசாங்கம் முன்வருமாகவிருந்தால், அதை அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டு அதற்கு முழு அனுசரணையும் கொடுக்குமாக இருந்தால் ஜனாதிபதியுடைய முயற்சிகளின் முக்கியமான இலக்குகளை நாங்கள் எட்டிக் கொள்ளமுடியும்.இது தவிரவும் இதைவிடவும் முக்கியமான பரந்துபட்ட திருத்தங்கள் அரசியலமைப்புக்கு தேவையாக இருந்தால் அது சம்பந்தமாக இன்னும் கூடி நாங்கள் கதைத்து அதற்கு அப்பாலும் நாட்டில் இருக்கிற அரச இயந்திரங்களின் செயல்பாடுகள் சம்பந்தமான ஏனைய விடயங்களிலும் எங்களுடைய கவனத்தைச் செலுத்தலாம்.


தமிழ் தரப்பாக இருக்கட்டும், முஸ்லிம் தரப்பாக இருக்கட்டும் கோரிக்கைகளை முன்வைக்கின்ற பொழுது அவர்களுடைய அபிலாஷைகளின் உச்சகட்ட அபிலாஷைகளைத்தான் முன்வைத்து பேசுவார்கள், அதில் எந்த தவறுமில்லை.  ஆனால், உச்சக்கட்ட அபிலாஷைகளை வைத்துவிட்டார்கள் என்பதற்காக அவர்கள் ஏற்றுக்  கொள்ளக்கூடிய குறைந்தபட்ச உடன்பாடுகளைப் பற்றியாவது ஆளும் தரப்பினர் ,பெரும்பான்மை சமூகம் சிந்திக்கவேண்டும். அப்படி சிந்திக்காமல் எடுத்தற்கெல்லாம் தமிழ் தலைவர்கள் மீதும், சிறுபான்மை தலைவர்கள் மீதும் குற்றம் சுமத்துவதைவிட்டும் அவர்களும் சற்று மாற்றமான கருத்துக்களை முன்வைக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு என்றார்.


எம்.என்.எம்.யஸீர் அறபாத்,ஓட்டமாவடி.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال