JobVibe.lk - Sri Lanka Job Portal

கிழக்கு மாகாணத்தில் திணைக்களத் தலைவர்கள் சிலருக்கு இடமாற்றம்.

நூருள் ஹுதா உமர்

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களின் பணிப்புரைக்கு அமைய மாகாணத்தில் நீண்டகாலமாக ஒரே பதவியில் கடமையாற்றிய சில திணைக்களத் தலைவர்கள்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்ததாலும், அந்த பதவிகள் தொடர்பான தகுதிகளை பூர்த்தி செய்யாததாலும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு, மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்க அவர்களிற்கு ஆளுநர் அறிவுரை வழங்கினார்.


அதற்கமைய, மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளராக கடமையாற்றிய திருமதி.ஆர்.வளர்மதி மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாணக் கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய திரு.என்.சிவலிங்கம் மாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாகாண கூட்டுறவு ஆணையாளராக கடமையாற்றிய ஏ.எல்.எம். அஸ்மி கல்முனை மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாகாண கலாசார பணிப்பாளராக கடமையாற்றிய திரு.எஸ்.நவநீதன் மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் காப்புறுதி சேவைகள் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளராக பணியாற்றிய திருமதி.எஸ்.சரணியா மாகாண கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மாகாண கூட்டுறவுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராகப் பணியாற்றிய திரு. ஏ.ஜி. தேவேந்திரன்மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளராக கடமையாற்றிய திரு.கே.இளந்துடுதன் மாகாண கூட்டுறவு சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்க தலைமையில் வழங்கப்பட்டது. புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இன்று (02) காலை திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال