JobVibe.lk - Sri Lanka Job Portal

தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி ஹாறுன் தெரிவு!

நூருள் ஹுதா உமர்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக இரசாயனவியல் துறையின் தலைவர் கலாநிதி முகம்மட் ஹனிபா  ஹாறுன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


 2022.08.03 ஆம் திகதி, உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில், பிரயோக விஞ்ஞான பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விஷேட ஒன்றுகூடலின் போதே கலாநிதி எம். எச். ஹாறுன் தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.


அம்பாறை மாவட்டத்தில் உல்லாசப்பயணத்துக்கு பெயர் பெற்ற இடமான பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஹாறுன், தனது ஆரம்பக் கல்வியை பொத்துவில் மஹா வித்தியாலயத்திலும் இரண்டாம் நிலைக் கல்வியை கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியிலும் கற்றிருந்தார்.


கலாநிதி ஹாறுன், தனது பல்கலைக்கழகக் கல்வியை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்று தேர்ச்சி பெற்று, பின்னர் கலாநிதி பட்டத்தைப் பெறுவதற்கான கல்வியை இலங்கை, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களிலுள்ள பல்கலைக்கழகங்களில் கற்றிருந்தார்.


2001 டிசம்பர் மாதத்தில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்துகொண்ட ஹாறுன், அவர் சார்ந்த துறையில் பல்வேறு உயர்வுகளைப் பெற்றதுடன் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகத்துறை சார்ந்த பதவிகளையும் வகித்துள்ளார்.

எட்டுப் பேர் கொண்ட குடும்பத்தில் இரண்டாவதாகப் பிறந்த இவர், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான ஆசிரியை வாரிதாவை மணந்து, இப்ரான்,இன்சாப்,சீராஸ் மற்றும் செய்னப் ஆகியோரின் தந்தையுமாவார். இவர் பொத்துவில் பிரதேசசபை தலைவரின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கலாநிதி எம்.எச். ஹாறுன் அவர்களுக்கு முன்பாக தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் பீடாதிபதிகளாக செல்வி வீ.சந்தானம், ஏ.நஸீர் அஹமட், பேராசிரியர் ஏ.எம்.றஸ்மி, கலாநிதி எம்.ஐ.எஸ்.சபீனா மற்றும் கலாநிதி யூ.எல். செய்னுடீன் ஆகியோர் கடமையாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال