நீண்ட நாட்களின் பின்னர் மௌனம் கலைத்த அதாஉல்லா எம்.பி : பொதுவெளியில் விளாசி தள்ளிய பொதுமக்கள் !
நூருல் ஹுதா உமர்
தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா மிக அதிக நாட்களின் பின்னர் ஊடகங்களின் முன்னால் தோன்றி சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்தார். அதில் அதிகமான இடங்களில் ராஜபக்ஸ குடும்பத்தினருக்கு ஆதரவாகவும் சில இடங்களில் மெத்தனப்போக்கான கதைகளையும் தெரிவித்த அவரின் கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பும் கண்டனங்களும் எழ ஆரம்பித்துள்ளது.
அவரது சொந்த, உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் கூட நேரடி அஞ்சல் செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் காணொளியின் கீழ் அதிகமான சமூக வளைத்தள பாவனையாளர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள். அதில் அரசுக்கும், அரசு சார்பு நிலைப்பாட்டில் இருக்கும் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களுக்கும் இழி சொற்களை பயன்படுத்தி தமது எதிர்ப்பை வெளிக்காட்டிய சமூக வலைத்தள பாவனையாளர்கள் அதிகமானவர்கள் நக்கல் நையாண்டியுடன் கூடிய கிண்டலான பாணியில் அவரை விமர்சித்துள்ளனர்.
அவர் தனது அரசியல் போட்டியாளர்களுக்கு பயன்படுத்தும் சொற்களை கொண்டு அவரை கிண்டல் செய்துள்ள பொதுமக்கள் ஆளும்தரப்பில் உள்ள ஒரே முஸ்லிம் கட்சியான தேசிய காங்கிரஸ் வெளியில் விமர்சிப்பது போன்று பாசாங்கு காட்டிக்கொண்டு மறைமுகமாக அரசின் சுகபோகங்களை அனுபவிக்காமல் அரசை விட்டு வெளியேறி அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னின்று நடத்த முடியுமா என்று பகிரங்க சவாலும் விடுத்துள்ளனர். சாய்ந்தமருது நகர சபை விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கும் அவர் ஏனோ தானோ என்று பதிலளித்திருந்தமையும் பெரியளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அரசின் பங்காளியாக இருக்கும் ஒரு கட்சி தலைவரை பொதுவெளியில் மக்கள் இப்படி விளாசி தள்ளியிருப்பது அரசின் மீதும் அதாஉல்லா எம்.பி மீதும் மக்களுக்கு இருக்கும் வெறுப்பை வெளிக்காட்டுகிறது. அண்மைய காலமாக பஷில் தரப்பினரின் நம்பிக்கையிழந்து அரசியல் செல்வாக்கில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள தேசிய காங்கிரஸுக்கு மக்கள் செல்வாக்கும் இல்லாமலாகி இருப்பது இங்கு தெளிவாக வெளிக்காட்டப்பட்டுள்ளது.
No comments