எம்.யூ.எம்.சனூன்
தித்வா பேரழிவால் முற்றிலுமாக சேதமடைந்த வீடுகளுக்காக, புத்தளம் மாவட்டம், கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஹல்மில்லகொல்லேவ தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய வீட்டுவசதித் திட்டத்தின் தொடக்க விழா அண்மையில் (02) இடம்பெற்றது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், சாலியவெவ, மூணமல்கஸ்வேவ மற்றும் பஹல புளியங்குளம் கிராம சேவையாளர் பிரிவுகளில் தித்வா பேரழிவால் வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்த 49 குடும்பங்களுக்கு தலா ரூபா 5 மில்லியன் மதிப்புள்ள வீடுகள் கட்டப்படும். மேலும், பயனாளிகளுக்கு தலா 20 பேர்ச்சஸ் நிலப் பங்குகளும் வழங்கப்படும்.
நேர்மை மிகு நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடித்ததாலும், நாட்டுக்கு உகந்த பாதையைப் பின்பற்றியதாலும், கடந்த ஆண்டில் மட்டும் அரசாங்கம் திறைசேரியிலிருந்து ரூபா 100 மில்லியனைத் திரட்ட முடிந்தது என்றும், அவ்வாறு ஈட்டப்பட்ட செல்வம் இன்று மக்களின் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
மக்களின் சார்பாக அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு, அமைச்சுக்களின் செயலாளர்கள் முதல் அடிமட்ட பொது அதிகாரிகள் வரை அனைவரையும் சாரும் என்றும், அரசாங்கம், அரச இயந்திரம் மற்றும் சமூகம் ஆகிய மூன்று தரப்பினரும் முறையாக ஒன்றிணைந்து செயல்பட்டால், குறுகிய காலத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் அமைச்சர் குறிப்பட்டார்.
நாடு இதுவரை சந்தித்ததிலேயே மிக மோசமான இயற்கை பேரிடரான 'தித்வா' பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதே அரசாங்கத்தின் தலையாய முன்னுரிமை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் கருவலகஸ்வெவ பிரதேச சபை தலைவர் நீல் நவரத்ன, பிரதேச சபை உறுப்பினர் நிமல் விக்ரமசிங்க, கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர் உள்ளிட்ட பொதுப் பிரதிநிதிகள், பொது அதிகாரிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.




