காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் 57ஆவது பட்டமளிப்பு விழா இன்று (06) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) பரீட் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் தலைவர் அஷ்-ஷெய்க் ஏ.எம். அலியார் (பலாஹி, ரியாழி), MA அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கல்லூரியின் அதிபர் அஷ்-ஷெய்க் ஏ.எஸ்.எம். பாறூக் (பலாஹி, அஸ்ஹரி), MA முன்னிலை வகித்தார்.
நிகழ்வின் பிரதம விருந்தினராக பேருவளை ஜாமிஆ நளீமிய்யா நிறுவனத்தின் முதல்வர் அஷ்-ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்களும், கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது, ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் தமது கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அத்துடன், அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் மற்றும் இக்கல்லூரியில் கல்வி கற்று தற்போது கலாநிதி பட்டம் பெற்றவர்கள் உள்ளிட்ட பலரும், கல்வி மற்றும் மார்க்கத் துறைகளில் அவர்கள் பெற்ற சாதனைகளைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், மார்க்கக் கல்வியின் முக்கியத்துவம், சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனளிக்கும் அறிவார்ந்த தலைமுறையை உருவாக்குவதில் அரபுக் கல்லூரிகளின் பங்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சிறப்புரைகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் சமூகத்திற்கும் மக்களுக்கும் ஆற்றிவரும் சேவைகள் மற்றும் பங்களிப்புகளைப் பாராட்டி, ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரி நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
மக்களின் நலன், கல்வி, சமூக அபிவிருத்தி, இளைஞர்களின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் ஆற்றிவரும் பங்களிப்புகளைப் பாராட்டும் வகையில் இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், JP, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், கல்விமான்கள், உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
57 ஆண்டுகால சிறப்புமிக்க கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் வரலாற்றில், இப்பட்டமளிப்பு விழா மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.







