(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்வி அமைச்சின் விசேட சுற்று நிருபத்திற்கு அமைவாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் மீலாதுன் நபி விழா (09) மிகச் சிறப்பாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது.
பாடசாலை அதிபரின் வழிகாட்டலிலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முழுமையான ஒத்துழைப்புடனும் இடம்பெற்ற இவ்விழாவில், மாணவர்களின் பங்கேற்புடன் பல்வேறு ஆன்மீக மற்றும் கலாசார நிகழ்வுகள் சிறப்பாக அரங்கேற்றப்பட்டன.
முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும், பளீல் மௌலானா பௌண்டேஷனின் தலைவரும், மருதமுனை ஜம்இய்யத்துல் உலமா சபைதலைவருமான அஷ்ஷெய்க் ஏ.எம். அஹமட் அன்ஸார் மௌலானா நளீமி அவர்களினால் “நபிகளாரின் போதனை முறைகளும் எமது காலத்திற்கான சிறந்த முன்மாதிரியான கற்பித்தலும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மேலும், கலாநிதி ஜௌஹ்பர் சாதிக் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
இளம் தலைமுறையினரின் உள்ளங்களில் இஸ்லாமிய விழுமியங்களையும் நற்பண்புகளையும் விதைக்கும் அருமையான நிகழ்வாக இவ்விழா அமைந்தது.
இந்நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுக்க அர்ப்பணிப்புடன் ஒத்துழைத்த அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அதிபர் என்.எம். முஹம்மட் முபீன் (SLPS) அவர்கள் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.