“முஸ்லிம்கள் ஒரு தனியான சமூகமல்ல, தமிழ் பேசுகின்ற கிறிஸ்தவர்கள் போன்று அவர்களும் தமிழ் பேசும் முஸ்லிம்கள்” என்பதுதான் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் அவர்களது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு பின்பு பல விட்டுக்கொடுப்புக்களுடன் LTTE யினர் முஸ்லிம் தரப்பினருடன், வரலாற்றில் முதன் முதலில் உடன்படிக்கை ஒன்றினை செய்தனர்.
அந்த உடன்படிக்கையின் காரணமாக ஐ.தே.க. அரசாங்கம் விழித்துக் கொண்டதுடன், தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கிடையில் நிரந்தர பகைமையை ஏற்படுத்துவதன் மூலம் தமிழீழ போராட்டத்தினை தோற்கடிப்பதற்கான தந்திரோபாயங்களை மேகொள்ள ஆரம்பித்தனர்.
விடுதலை புலிகளுக்கும், வட-கிழக்கில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப் படையினர்களுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், இந்தியாவின் சென்னை நகரத்தில் புலிகளுக்கும் முஸ்லிம் தரப்பினர்களுக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
அதில், தமிழீழத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தமிழ் மொழியை பேசினாலும், அவர்கள் வேறுபட்ட தனியான இனம் என்றும், வட-கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு எவ்வாறு பாரம்பரிய தாயகமாக உள்ளதோ, அதேபோல முஸ்லிம்களினதும் பாரம்பரிய தாயகமாகும்.
தாயகத்தில் தமிழர்கள் எவ்வாறு அரசியல் உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிக்கின்றார்களோ, அதேபோல் முஸ்லிம்களும் அனுபவிக்க முழு உரிமையும் உண்டு.
நிராயுதபாணிகளான முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அவர்கள் அச்சம், பயம், சந்தேகமின்றி வாழ்வதற்கான அனைத்து உத்தரவாதத்தினையும் புலிகள் சட்டரீதியாக உறுதிப்படுத்துவார்கள் என்றும்,
கிழக்கில் 33 வீதமாக இருந்த முஸ்லிம்கள், வட-கிழக்கு இணைப்பின் காரணமாக 17 வீதமாக குறைக்கப்பட்டார்கள். அதனால் மாகாணசபையில் 30 வீதத்துக்கு குறையாத பிரதிநித்துவத்தை முஸ்லிம்களுக்கு வழங்குவதுடன், அமைச்சரவையில் இடம் வழங்கப்படுவதற்கும் சட்ட ஏற்பாடுகளை செய்தல்.
அரச காணிப் பங்கீட்டில் கிழக்கில் 35 வீதத்துக்கு குறையாமலும், மன்னார் மாவட்டத்தில் 30 வீதத்துக்கு குறையாமலும், வடமாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 5 வீதத்துக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
கல்வியில் சமவாய்ப்புக்கள் பேணப்படுகின்ற அதேநேரம், விகிதாசாரப்படி வேலை வாய்ப்புக்களை வழங்குவதுடன், முஸ்லிம்களுக்காக தனியான இஸ்லாமிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
வடகிழக்கு மாகாணசபையில் பிரதி முதலமைச்சராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்படும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும்,
தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் காரணமாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினை களையும் பொருட்டு ஒரு குடியகழ்வு கொள்கையினை உருவாக்குதல்.
போன்ற விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் பிரதானமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
1988 ஏப்ரல் மாதம் 15,16,19 ஆகிய திகதிகளில் நீண்ட கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு இறுதியில் 21.04.1988 திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு கூட்டறிக்கையும் வாசிக்கப்பட்டது.
பதினெட்டு (18) அம்சங்களைக்கொண்ட இந்த ஒப்பந்தத்தில் விடுதலை புலிகளின் சார்பில் “கிட்டு” என்று அழைக்கப்பட்ட சதாசிவம் கிருஷ்னகுமாரும், முஸ்லிம்கள் சார்பில் எம்.ஐ.எம். மொஹிதீன் அவர்களும் கையொப்பமிட்டார்கள்.
1990 இல் புலிகளுக்கும் பிரேமதாசாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்து, இரண்டாவது ஈழப்போர் ஆரம்பிக்கும் வரைக்கும் LTTE யினர் முஸ்லிம் பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டதற்கான எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
இதுபற்றி தொடர்ந்து ஆராய்வோம்........
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
