((எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையினால் பொது நல்லுள்ளம் படைத்தவர்களின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட மையவாடிகளுக்கான மண் நிரப்பும் வேலைத்திட்டத்தின் கணக்கறிக்கை தொடர்பாகவும் உதவி புரிந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் தலைமைக் காரியாலத்தில் ஜனாஸா அமைப்பின் ஸூரா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.ரஃபி (ஹிழ்ரி) அவர்களின் தலைமையில் (15) நடைபெற்றது.
ஸூரா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.ரஃபி (ஹிழ்ரி) அவர்கள் இங்கு கருத்து தெரிவிகையில், மையவாடிகளுக்கு மண் நிரப்பும் பணிகளுக்கு பல வழிகளிலும் உதவி, ஒத்தாசை புரிந்த வெளிநாடுகளில் மற்றும் உள்ளூர்களில் வாழும் அனைத்து நல் உள்ளம் படைத்தவர்களுக்கு சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை சார்பாக நன்றியினைத் தெரிவித்தார்.
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையில் இணைந்து, நன்மையை மாத்திரம் எதிர்பார்த்து இரவு, பகல் பாராது பணியாற்றும் அனைத்து களப் பணியாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
இதன்போது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் தலைவர் எஸ்.எம். நஸீர் கணக்கறிக்கையைச் சமர்ப்பித்தார்.
அதில் அவர், மையவாடிகளுக்கு மண் நிரப்பும் பணிக்காக வெளிநாடுகளில் இருந்தும் உள் ஊர்களில் இருந்தும் பெயர் குறிப்பிட்டும் பெயர் குறிப்பிடாமலும் இருபது இலட்சத்து இருபத்து நான்காயிரத்து ஐநூற்று எண்பது ரூபாய் (2,024,580/-) பணம் கிடைக்கப்பெற்றதாகவும் குறித்த வேலைப்பணிகளுக்காக பதினைந்து இலட்சத்து ஐம்பத்தாறாயித்து அறுநூற்று நாற்பது ரூபாய் (1,556,640/-) செலவாகியுள்ளதாகவும் தற்போது நான்கு இலட்சத்து அறுபத்தேழாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது ரூபாய் (467,940/-) பணம் கையிருப்பில் எஞ்சி இருப்பதாகவும் அப்பணம் மண் நிரப்பும் பணிகளுக்கே எதிர்காலத்தில் பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் தலைவர் எஸ்.எம். நஸீர், பொதுச் செயலாளர் யூ.கே. காலித்தீன், பொருளாளர் ஏ.எச். முர்சித், உதவித் தலைவர் ஏ.எல்.எம். நியாஸ் ஹாஜி, பிரதி தலைவர் எம்.என். ஜெமீன் மற்றும் ஸூரா சபையின் உறுப்பினர் எஸ்.எச். நஸீர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


