தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிக்கக் கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த தனிநபர் பிரேரணை எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எமது மாணவர்களுக்கு மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவதுடன், பிராந்தியத்தில் மருத்துவ சேவையின் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவ வேண்டியதன் அவசியத்தை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் இந்த தனிநபர் பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
