(அஸ்லம் எஸ்.மௌலானா)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவடுத்தும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (18) சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸைவை சந்தித்து, முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் சீருடை குறித்த சர்ச்சைக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 09 முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள், அங்கு அவர்களது சீருடைக்கு மேலதிகமாக தலையை மூடும் வகையிலான ஹிஜாப் அணிந்து கடமைக்கு செல்வது சர்ச்சைக்குரிய பிரச்சினையாக மாறியதையடுத்து, அவர்களை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்றியிருப்பதானது உரிய பிரச்சினைக்கு தீர்வாக அமையாது எனவும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் முஸ்லிம் எம்.பிக்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனை ஏற்றுக் கொண்ட சுகாதார அமைச்சர், இந்த இடமாற்றம் நிரந்தரமான தீர்வல்ல எனவும் தற்காலிக ஏற்பாடு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதன் அவசியத்தையும் நியாயமான மதத் தேவைகளுக்கு இடமளிக்கும் வகையில் பொருத்தமான சீருடை ஏற்பாடுகளை அனுமதிக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் ஏற்றுக் கொண்டார்.
இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹரூப், எம். நிஸாம் காரியப்பர், எம்.எஸ். உத்துமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாசித், அஷ்ரப் தாஹிர், என்.ரி.எம். தாஹிர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
