(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் நோயுற்ற உள்நாட்டு பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் கடற்படைக் கப்பல் மூலம் விரைவாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்க வியாழக்கிழமை (2026 ஜூலை 23) நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 2026 ஜூலை மாதம் 15 ஆம் திகதி ஆறு (06) மீனவர்களுடன் புறப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகு, இலங்கைக்கு தெற்கே சுமார் இருநூற்று நாற்பத்து நான்கு (244) கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, அதில் இருந்த மீனவர் ஒருவர் திடீர் நோயுற்றார். அந்த மீனவருக்கு சிகிச்சை அளிப்பதற்காகக் கரைக்குக் கொண்டு வர தேவையான கடற்படையின் உதவியை வழங்குமாறு, கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்குச் செய்யப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, குறித்த மீன்பிடிப் படகில் நோயுற்ற மீனவருக்கு உதவுமாறு அந்த கடல் பகுதி வழியாகப் பயணிக்கும் வர்த்தகக் கப்பலுக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கமைய, ‘CMA CGM BAHIA’ எனும் வர்த்தகக் கப்பல் மூலம் திடீர் நோயுற்ற மீனவர் பாதுகாப்பாக அக்கப்பலுக்குள் ஏற்றப்பட்டார். மேலதிக சிகிச்சைக்காக அவரை கரைக்குக் கொண்டு வருவதற்காக, வியாழக்கிழமை (2026 ஜூலை 23) மேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட கடற்படைக் கப்பல் ஒன்று குறித்த வர்த்தகக் கப்பலை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கமைய, நோயுற்ற மீனவர் கடற்படைக் கப்பலுக்குள் ஏற்றப்பட்ட பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, விரைவாக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க கடற்படை நடவடிக்கை எடுத்தது.
மேலும், கொழும்பு கடற்படை பிரிவில் அமைந்துள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்புப் பிராந்தியத்திற்குள் இடர்ப்பாட்டில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை தொடர்ந்து தயார் நிலையில் உள்ளது.






