(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
முயற்சிக்கு என்றும் முதலிடம் என்ற நோக்கில், கடந்த ஆறு வருடங்களாகப் பல்வேறு துறைகளில் சாதனைகளைப் படைத்து வரும் ஆர்.ஜே.மீடியா ஊடக வலையமைப்பின் ஆறு வருடப் பூர்த்தியும் கௌரவிப்பு நிகழ்வும், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அதன் பணிப்பாளர் ஏ.எம்.இன்ஷாப் தலைமையில் நேற்று (04) சனிக்கிழமை மிக விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் எம்.எம்.பாஸில் கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ அதிதிகளாக, இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் றிஸ்வி மஜீதி, வைத்தியர் பி.றிம்ஸான், சிரேஷ்ட வானிலை அதிகாரி ஸாலிஹீன், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஸமீஹா ஸபீர் மற்றும், சாய்ந்தமருது பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் றஸ்மி மூஸா, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சிரேஷ்ட முன்னாள் விரிவுரையாளரும் சிரேஷ்ட உளவியல் ஆலோசகருமான அஸ்மியாஸ் ஷஹீத், விரிவுரையாளர் றமீஸா கான், சிரேஷ்ட ஊடகவியலாளர் இர்ஷாத் ஏ.காதர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
மேலும் விசேட அதிதிகளாக, வசந்தம் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் எம்.கவிதா பாரதி, ஆய்வாளர் ஹென்ரி மிட்செல், வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் தயாரிப்பாளருமான ஏ.எம்.அஸ்கர் மற்றும், ஸிக்னேச்சர் குளோ நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.எச்.இஷ்ரத் ரிஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த அதிதிகளுக்கு அவர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டதுடன், ஆர்.ஜே. மீடியாவின் ஆறு வருடப் பூர்த்தி விழாவுடன் உறுப்பினர்கள் கௌரவிப்பு, ஊடகக் கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான கௌரவிப்பு,
மேலும், மருதாணிப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கௌரவிப்பு, ஒரு வருட காலமாக நடைபெற்ற அறிவிப்பாளர் குரல் மகுடம் போட்டியில் தேசிய ரீதியில் முதல் இடம்பெற்ற அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த எ.ஸி.ஹதீகா ஸனானிஸ் குரல் மகுடம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், ஏனைய வெற்றியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், வணிகத் துறையில் சிறப்புச் சாதனைகளைப் படைத்தவர்களுக்கான பிசினஸ் எக்ஸலன்ஸ் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.



