(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் மாவட்டத்தில் காணப்படும் சிலிக்கா மணலின் உண்மையான பெறுமதியை உணராமல், கடந்த காலங்களில் வீடுகளுக்கு சாந்து பூசவும், சுவர் எழுப்பவும் இதனைப் பயன்படுத்தியமை பெரும் துரதிர்ஷ்டவசமானது என தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
சிலாபம் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற வடமேல் மற்றும் வடமத்திய மாகாண ஏற்றுமதியாளர்களை இணைக்கும் மாநாட்டிலேயே, இலங்கையின் புதிய பொருளாதார பாய்ச்சல் குறித்த இந்த அதிரடித் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இலங்கையின் வரலாற்றில் கடந்த இருபது வருடங்களின் பின்னர், சேவைத் துறையை முந்திக்கொண்டு கைத்தொழில் மற்றும் உற்பத்தித் துறை 7.2 வீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இது ஒரு நாட்டின் நிலையான பொருளாதாரத்திற்கு மிகச் சிறந்த அடித்தளமாகும். வெறும் நுகர்வுப் பொருளாதாரமாக இல்லாமல், மக்களின் பங்களிப்புடன் கூடிய “உற்பத்திப் பொருளாதாரத்தை” கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கொள்கையாக மாறியுள்ளது.
புத்தளம் மாவட்டம் ஏற்கனவே 2026இல் 309 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டியுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் அதனை 352 மில்லியன் டொலராக உயர்த்த இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கான பொக்கிஷமாக இந்த “சிலிக்கான் சிட்டி” (Silicon City) திட்டம் அமையவுள்ளது.
நிலத்தின் உரிமையாளர் யாராக இருந்தாலும், அதற்கு அடியில் இருக்கும் கனிம வளங்கள் நாட்டுக்கே சொந்தம் என்ற சட்டதிட்டங்களுக்கு அமைவாக, இனிமேல் சிலிக்கா மணலை சாதாரண தேவைகளுக்கு அகழ்வதற்கு முற்றாகத் தடை விதிக்கப்படவுள்ளது.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சர்வதேச முதலீட்டாளர்களை இலங்கைக்குள் கொண்டுவந்து, புத்தளத்திலேயே பெறுமதி சேர்க்கப்பட்ட சிலிக்கான் தயாரிப்புகளை உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ள அதேநேரம், கடந்த காலங்களில் ஆறுகளிலும் கால்வாய்களிலும் கண்மூடித்தனமாக மணல் அகழ்ந்ததால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளைச் சீரமைக்க, மணல் விற்ற வருமானத்தை விட அதிக பணத்தை அரசாங்கம் செலவிட வேண்டியுள்ள கசப்பான உண்மையையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே, சூழலைப் பாதிக்காத வகையில், கடுமையான ஒழுங்குமுறைகளின் கீழ் இந்த புதிய “சிலிக்கன் சிட்டி” திட்டம் புத்தளத்தில் முடுக்கிவிடப்படவுள்ளது.
இந்த விசேட மாநாட்டில் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க மற்றும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான், ஹிருணி விஜேசிங்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.



