JobVibe.lk - Sri Lanka Job Portal

டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி”: கல்முனையில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் விழிப்புணர்வு செயற்றிட்டம் ஆரம்பம்

நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தலில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கான சமூக மட்டத்திலான விழிப்புணர்வு மற்றும் ஒழிப்புச் செயற்றிட்டம், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த மக்கள் நல செயற்றிட்டம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல், நேற்று (11) கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஆசாத் பிளாசா மண்டபத்தில், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

இச்செயற்றிட்டத்தின் அவசியம் குறித்து விளக்கிய ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற சுகாதார அமைச்சுடன் இடம்பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் கூறுகையில்:

"இன்று நாட்டில் அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்ற டெங்கு அபாயத்திலிருந்து மக்களை மீட்டெடுக்கின்ற பணியில், சமூக மட்ட செயல்பாடுகளைச் செய்கிற ஒரு செயல்திட்டமொன்று அவசியம் என்று கருதப்பட்டது. இது குறித்து பாராளுமன்றத்தின் சுகாதார அமைச்சு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு கிராம மட்டத்திலும் இது விரிவாக்கப்படவேண்டிய அவசியம் பேசப்பட்டிருக்கின்றது. நாங்கள் அவசரமாக இதை எமது உள்ளூராட்சி மன்றத் தலைவர்களூடாகவும், எமது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடைய தலைமையிலும், கட்சியின் ஏனைய கீழ்மட்டச் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, இந்த மாவட்டம் தொடங்கி ஏனைய இரண்டு மாவட்டங்களிலும் இதை விரிவுபடுத்திச் செய்வது என்ற தீர்மானத்திற்கு நாங்கள் வந்திருக்கின்றோம்" என்று தெரிவித்தார்.

டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டம், எதிர்வரும் ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 09, 2026 வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை உத்தியோகத்தர்களின் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புடன், சமூகத்தின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வகையில் இத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அத்துடன் கல்முனை பிராந்திய சுகாதார அதிகாரிகள், கட்சியின் பிரதேச மற்றும் இளைஞர் அமைப்பாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் பங்கேற்று, இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.


(ஊடகப் பிரிவு)










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال