எம்.யூ.எம்.சனூன்
புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலய கலையக மாணவர்கள், டெங்கு நோயை எவ்வாறு ஒழிப்பது மற்றும் அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பு பெறுவது என்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் (08) தெருக்கூத்து நிகழ்வொன்றை அரங்கேற்றினர்.
“நம்மை நாமே காப்போம்” என்ற தொனிப்பொருளில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாடசாலை அதிபர் எம்.யூ.எம். சாஜஹானின் வழிகாட்டலில், உமரியன்ஸ் தமிழ் இலக்கிய மன்றம் இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தியதுடன், பாடசாலை டெங்கு ஒழிப்புக் குழு இதற்கு ஆதரவு வழங்கியது.
இந்நிகழ்வின் மூலம் டெங்கு பரவலைத் தடுப்பதில் ஒவ்வொருவரும் தமது சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



