NGT கல்வி நிலையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவும், திறமைக்கான விருது வழங்கும் நிகழ்வும்.
எம்.யூ.எம்.சனூன்
கல்வி, திறமை மற்றும் எதிர்காலத்தை ஒரே மேடையில் ஒன்றிணைத்த ஒரு முக்கியமான நிகழ்வாக NGT கல்வி நிலையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவும், திறமைக்கான விருது வழங்கும் நிகழ்வும் அண்மையில் (06) குருநாகல் மாகாண சபை மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
“திறமைக்கான தூண்டுகோள்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதான நோக்கம், சமூகத்தில் மறைந்து கிடக்கும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து, அவர்களை மேலும் ஊக்குவித்து எதிர்கால வெற்றிப் பாதைக்கு வழி நடத்துவதாகும்.
நாட்டின் பல பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரம் மாணவர்கள் பல்வேறு திறன்களை வெளிப்படுத்தும் போட்டிகளில் பங்கேற்றனர்.
கடுமையான போட்டி மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில், சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 100 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், அந்த 100 வெற்றியாளர்களில் இருந்து மிகச் சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்த 10 மாணவர்களுக்கு “விஷேட திறமைகான விருது" வழங்கி விசேடமாக கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு கல்வி நிலையத்தின் நிறுவுனரும், தலைவியுமான அம்னா ஹலீம் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
கல்வி, திறன் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றம் தொடர்பான அவரது அர்ப்பணிப்பும், தொலைநோக்கு பார்வையும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவராலும் பாராட்டப்பட்டது.
ஒரே ஒரு ஆண்டுக் காலத்தில் பல சவால்களையும் தடைகளையும் கடந்து, ஆயிரக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கைக்குரிய கல்வி நிறுவனமாக இந்த கல்வி நிலையம் உருவெடுத்துள்ளமை, இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
“திறமைக்கு அங்கீகாரம் வழங்கப்படும் இடத்தில் வெற்றி உருவாகிறது, திறமை ஊக்குவிக்கப்படும் இடத்தில் வரலாறு படைக்கப்படுகிறது” என்ற கருத்தை உணர்த்தும் வகையில், இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களின் பங்கேற்பு நிகழ்விற்கு கூடுதல் பெருமை சேர்த்தது.
இந்நிகழ்வில் FN Media Network நிறுவனத்தின் உரிமையாளரும், கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சிகளின் குருநாகல் மாவட்ட செய்தியாளருமான ஏ.டபில்யூ.எம்.பஸ்லான், IDH Tamil Media நிறுவனத்தின் CEO மற்றும் நிறுவுனருமான முஹம்மது சித்தீக் ஹாரிஸ், சமூக ஊடகவியலாளர் முஹம்மது ராபிக், தேடல் மீடியா நிறுவனத்தின் CEO எஸ்.ஐ.எம்.ஹம்தி, கிரியேடிவ் மீடியா நெட்வேர்க் நிறுவனத்தின் நிறுவுனர் முஹம்மது சாதிப் ஆகியோர் அதிதிகளாக லந்து கொண்டு நிகழ்விற்கு மரியாதை சேர்த்தனர்.
மாணவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தி, அவர்களின் திறமைகளுக்கு அங்கீகாரம் வழங்கிய இந்த நிகழ்வு, எதிர்கால சாதனைகளுக்கான புதிய ஊக்கத்தை வழங்கிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.





No comments