(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையினர் நீர்கொழும்பு களப்பு பகுதியில் புதன்கிழமை (17) நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய கையிருப்புடன் ஒரு சிறிய படகையும் (01) கடற்படையினர் கைப்பற்றினர்.
மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான கெளனி நிறுவனத்தினால் நீர்கொழும்பு களப்பு பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான சிறிய படகொன்று (01) ஆய்வு செய்யப்பட்டது. குறித்த படகில் பதினாறு (16) பைகளால் பொதிசெய்யப்பட்டிருந்த ஐநூற்று நாற்பத்தேழு (547) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. மேலும், பீடி இலைகள் அடங்கிய பொதிகளை கடத்தல்காரர்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த நிலையில், கடற்படையின் நடவடிக்கைகள் காரணமாக அதனை கைவிட்டு தப்பியோடியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் சிறுபடகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.


