பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சருக்கு பதிலாக காலணிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
2026 ஆம் ஆண்டிற்காக மேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குக் காலணி வவுச்சர்களுக்குப் (Voucher) பதிலாக, உள்நாட்டு விநியோகஸ்தர்கள் ஊடாக நேரடியாகக் காலணிகளைப் பெற்றுக்கொடுக்கும் பரீட்சார்த்தத் திட்டம் பற்றிய கலந்துரையாடல் ஒன்று வியாழக்கிழமை (09) பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
காலணிகளின் தரத்தை உறுதிப்படுத்துதல், உற்பத்தி மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் பாடசாலைகளுடனான ஒருங்கிணைப்பின் போது ஏற்படும் சிக்கல்கள் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. பிள்ளைகளுக்கு வழங்கப்படும் காலணிகள் உயர்ந்த தரத்திலான உற்பத்திகளாக இருக்க வேண்டும் என்பதையும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய மாகாணங்கள், காலணிகளின் விலை விவரம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய திட்ட முன்மொழிவொன்றைச் சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு காலணி உற்பத்தியாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது






No comments