புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன் புரிச்சங்கத்தின் (புட்வா) நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன் புரிச்சங்கத்தின் (புட்வா) நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு சனிக்கிழமை (07) மாலை புத்தளம் மஸ்ஜித் வீதி நுஹ்மான் வரவேற்பு மண்டபத்தில் பிரமாண்டமான முறையிலே ஏற்பாடு செய்யப்பட்டது.
வர்த்தக நலன் புரிச்சங்கத்தின் தலைவரும், டெக்னோ குறூப் நிறைவேற்று பணிப்பாளருமான அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜப்ரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், புத்தளம் நகர வர்த்தக சமூகத்தினர், வர்த்தக துறையோடு தொடர்பான அரசாங்க அதிகாரிகள், மக்களுக்கான பொது சேவகர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள், வைத்திய துறையினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
புத்தளம் பிரதேச செயலகத்தின் திறன் அபிவிருத்தி அதிகாரி அஷ்ஷெய்க் ஏ.எம்.பர்ராஜ் இஸ்லாஹி கிராஅத் ஓதி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
புத்தளம் வர்த்தக சமூகத்தினருக்கும் மக்கள் சேவகர்களுக்கும் இடையில் நிலையான ஒற்றுமையை, தொடர்பாடலை ஏற்படுத்தும் முகமாகவே இந்த இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புத்தளம் நகர வர்த்தக சமூகத்தினர் அனைவரும் ஒருமித்து இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கி இருந்தனர்.
இந்நிகழ்வில் விஷேட உரையினை நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஏ.சீ.எம்.நபீல் நிகழ்த்தினார்.
புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரிக்காக கொள்வனவு செய்யப்படவுள்ள பேருந்துக்கான நிதி உதவிகளை வழங்கிட அனைத்து வர்த்தக சமூகமும் முன் வரவேண்டும் என்ற கோரிக்கையினை பேருந்து கொள்வனவு தொடர்பான இணைப்பாளரும், பவர் 90 பழைய மாணவர் குழும தலைவருமான கவிஞர் புத்தளம் மரிக்கார் விடுத்தார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பி.ஜிப்னாஸ் அல் மிஸ்பாஹி விஷேட துஆ பிரார்த்தனையை மேற்கொண்டார்.



















No comments