இன்று (17) காலை 9.30 மணியளவில் புத்தளம் மாநகர சபையின் மேயரால் இரண்டாவது முறையாக சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வெற்றியடைந்தது.
சில மாற்றங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 12 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் பதிவாகின. இதேவேளை, சபையின் இரண்டு உறுப்பினர்கள் இன்றைய அமர்வில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த வரவு செலவு திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் இஷாம் மரிக்கார், மக்கள் மீது முறையற்ற வகையில் வரிகளை திணிக்கும் நடவடிக்கைகளும், சட்டத்திற்கு முரணாகக் கணிக்கப்படும் வருமானங்கள் மற்றும் செலவுகளும் இதில் இடம்பெற்றுள்ள நிலையில், இப்படியான வரவு செலவு திட்டத்திற்கு ஒருபோதும் ஆதரவாக வாக்களிக்க முடியாது என தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, மேயர் சபையில் ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கும், எதிராக வாக்களித்த உறுப்பினர்களுக்கும், சபை அமர்வில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார். விட்ட தவறுகளை திருத்தி, அடுத்த வருடத்தில் இருந்து சரியாக பயணிப்பதாகவும் உறுதியளித்தார்.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தார்கள்.
எதிர்ப்பாக தூய தேசத்திற்கான கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
