இலங்கையில் கௌரவம் பெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் - பெருமிதம் கொள்கிறோம்.
இந்தியாவின் 79வது சுதந்திர தினக்கொண்டாட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களால் தமிழ்நாடு அரசின் உயரிய கௌரவமாக விளங்கும் “தகைசால் தமிழர் விருது” இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழ்மொழி, இலக்கியம், கலை, அறிவியல், கல்வி, சமூகம், மருத்துவம், தொழிநுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகச்சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது “தமிழ்நாடு அரசின் மிக உயர்ந்த விருது” எனக்கருதப்படுகிறது.
ஏன் “தகைசால் தமிழர் விருது” பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு வழங்கப்பட்டது?
பேராசிரியர் காதர் முஹைதீன் அவர்களின் மனிதநேயம், மத நல்லிணக்கம், அறிவார்ந்த சொற்பொழிவு, சமூக நலப்பணிகள் ஆகியவை இவ்விருதிற்கு அவரைத் தகுதியானவராக மாற்றியது.
2010ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் “தமிழ்நாட்டிற்கும் அரபு நாடுகளுக்குமுள்ள தொடர்புகள்” குறித்த ஆய்வுக் கட்டுரையை வழங்கியுள்ளார்.
தாருல் குர்ஆன் இதழில் எட்டாண்டுகள் தொடர்ச்சியாக “தமிழருக்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்தமா?” என்ற தலைப்பில் ஆழமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
“வாழும் நெறி”, “குர்ஆனின் குரல்”, “இஸ்லாமிய இறைக் கோட்பாடு” உள்ளிட்ட ஆறு நூல்களை எழுதி சமூக, அறிவுத்தளங்களில் பங்களித்துள்ளார்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 15 ஆண்டுகள் பேராசிரியராக இருந்து, மாணவர்களின் மனங்களில் சமூக நல்லிணக்கம், தன்னம்பிக்கை ஆகியவற்றை விதைத்துள்ளார்.
யார் இந்த பேராசிரியர் கே. எம். காதர் முஹைதீன்?
புதுக்கோட்டை மாவட்டத்தின் திருநல்லூரில், 1940 ஆம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி, பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தார்.
கல்வியில் பெரும் நாட்டம் கொண்டவராக தனது பயணத்தைத்தொடங்கிய அவர், அதன் பலனாக மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் முதுகலை (M.A.) பட்டம் பெற்றார். மேலும், அரபு மற்றும் உருது மொழிகளிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார்.
எழுத்தாளர், பத்திரிகையாளர்:
மாணவராக இருந்த போதே “மறுமலர்ச்சி” இதழில் கட்டுரைகள் எழுதத்தொடங்கிய அவர், முபாரக், தாருல் குர்ஆன் போன்ற பத்திரிகைகளில் முக்கியக் கட்டுரைகளை வழங்கினார். மேலும், மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
தமிழில் முக்கியமான நூல்களையும் நூற்றுக்கணக்கான கவிதைகளையும் எழுதியுள்ள அவர், மத ரீதியான ஒப்பீடுட்டு நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பாக "வாழும் நெறி" என்ற நூல் குறிப்பிடத்தக்கது.
அவரது எழுத்துகள் சமூக ஒற்றுமை, கல்வி முன்னேற்றம், மத விழிப்புணர்வு ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தன.
அரசியல் பங்களிப்பு:
மாணவர் நிலையிலிருந்தே அரசியல் மீது ஆர்வம் கொண்டிருந்த அவர், இந்திய முஸ்லிம்களின் இருப்பை உறுதி செய்வதில் அடையாளமாகத்திகழ்ந்த "இந்திய யூனியன் முஸ்லிம் லீக்" கட்சியின் செயற்பாடுகளில் ஈர்க்கப்பட்ட காதர் முஹைதீன் மாணவர் சங்கம் மூலம் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில உதவியாளராக, மாநில செயலாளராக பதவி வகித்து, தற்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராகவும் உயர்ந்திருக்கிறார்.
2004–2009 காலத்தில் மக்களவை உறுப்பினராக வேலூர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பல நாடாளுமன்றக்குழுக்களில் பணியாற்றினார். உள்துறை, வக்ஃப் தொடர்பான குழுக்கள், ஹஜ் குழு, பல்கலைக்கழகக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் சமூக நலனுக்காக உழைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, அரசியல், கல்வி இரு துறைகளிலும் ஆழமான பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றார்.
இவர் மனித நேயம், மத நல்லிணக்கம், அறிவார்ந்த சொற்பொழிவு, சமூதாய நலன் என்பவற்றிற்கு தன்னையே அர்ப்பணித்தார். அதில் அவருடைய எழுத்து, கல்விப்பணி மற்றும் சமூகப்பங்களிப்பும் முக்கியமானதாகும்.
மனிதநேயப்பண்பு
பேராசிரியர் காதர் முஹைதீன் அவர்களின் உயர்ந்த பண்புகளின் அடையாளம். மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, சமூக நீதிக்கான உறுதி ஆகியவற்றில் முன்னோடியாக இருந்தவர். பெண்கள், ஏழைகள், அனைத்து மதத்தினரும் அவரிடம் அணுகி உதவி பெற்றனர்.
மஹல்லா ஜமாத் கூட்டமைப்பைத்தொடங்கி, வட்டியில்லாத கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
பல்வேறு மதம் சார்ந்தவர்களிடையே கலந்துரையாடல்கள், ஒப்பீட்டு மதம் வகுப்புகள் நடத்துதல் போன்றவற்றால் மத நல்லிணக்கத்துக்கு வழிவகுத்தார். சகிப்புத்தன்மையை வளர்த்தார்.
உரிமைகளை வென்றெடுக்கவும் அநீதிக்கெதிராகவும் உரத்த குரலில் போராடியவர். அவர், அரசியல் ரீதியாக உரிமைகளை வென்றெடுக்க கையாண்ட முக்கியமான போராட்டங்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளன.
2013ம் ஆண்டு ஏப்ரல் 2 – தமிழ்நாடு முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சில கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டது.
அவை,
முஸ்லிம்களுக்கு தனித்த ஒதுக்கீடு உயர்த்த வேண்டும். நிர்ப்பந்த கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். மது விற்பனையைத்தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பேரணியை நேரடியாக தனது தலைமையிலே நடத்தினார். பின்னர் மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தார்.
வக்ஃப் சட்டத்திருத்தங்களுக்கெதிரான போராட்டத்தில் வக்ஃப் சொத்துகளின் உரிமை குறையும் வகையிலான மசோதாவைத்திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இப்போராட்டத்தில் அவரின் பங்களிப்பாக நாடளாவிய உரைகள், ஊடகக்கருத்துரைகள், பொதுக்கூட்டங்கள் மூலம் போராடினார். “இது வக்ஃப் திருத்தம் அல்ல, வக்ஃப் நிர்மூலமாக்குதல்” என உரையாற்றி பெரிய எதிர்ப்பை எழுப்பினார்.
மத்திய, மாநில அரசுகளுக்கெதிரான கட்சித்தீர்மானங்கள் மற்றும் போராட்டங்கள்
ரயில்வே கட்டண உயர்வுக்கெதிரான பிரசாரம்.
இந்தி திணிப்பு எதிர்ப்பு நடவடிக்கைகள்.
இலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கும் பொதுக்கூட்டங்கள்.
இந்திய மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கெதிரான சட்டங்களைக்கொண்டு வந்த போது, மத்திய அரசை நோக்கி "இறைவனின் சட்டத்தை மாற்ற நீங்கள் யார்?" என பொங்கியெழுந்து காரசாரமான கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினார்.
இவை அனைத்திலும் காதர் முஹைதீன் முன்மொழிந்த தீர்மானங்கள், ஆர்ப்பாட்ட அழைப்புகள், தெருப்போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
கே.எம்.காதர் முஹைதீன் தலைமையில் நடத்தப்பட்ட போராட்டங்களில் முழுமையாக அல்லது பகுதியளவில் வெற்றியைத்தந்தன.
*முஸ்லிம்களுக்கு இடவொதுக்கீடு உயர்வு கோரிக்கை (2013 ஆர்ப்பாட்டம்)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பல ஆண்டுகளாகக் கொண்டு வந்த கோரிக்கையாக இருந்தது.
2007-ல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆணையம் அடிப்படையில் தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு தனியொதுக்கீடு வழங்கப்பட்டது.
பின்னர் அதனை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை 2013 ஆர்ப்பாட்டங்கள் மூலம் மீண்டும் எழுப்பினர்.
இதனால், தமிழ்நாடு அரசு 2010களின் இறுதியில் முஸ்லிம் சமூக நலத்திட்ட நிதியை அதிகரித்து, கல்வி உதவித்தொகை மற்றும் சமூகப்பங்கு அதிகரிப்பை நடைமுறையில் கொண்டு வந்தது.
வக்ஃப் சட்டத்திருத்த எதிர்ப்பு :
அவர் “இது வக்ஃப் திருத்தம் அல்ல, வக்ஃப் நிர்மூலமாக்குதல் எனக்கண்டித்த போது, கடும் எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு திருத்தச்சட்டத்தில் சில பிரிவுகளைத்தளர்த்தி மாற்றங்களைச்செய்தது. இது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் முஸ்லிம் தலைவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தால் ஏற்பட்ட வெற்றி.
இந்தி திணிப்பு எதிர்ப்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடர்ந்து எடுத்துக்கொண்ட போராட்டத்தில் அவர் முக்கிய பங்காற்றினார்.
தமிழ்நாடு முழுக்க “இந்தி விரோத மனப்பான்மை” வலுவானதால், அரசுகள் “இந்தி கட்டாயம்” என்பதை பின்வாங்கியுள்ளன. இது நடைமுறையில் வெற்றி கண்ட போராட்டமாகும்.
இலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதல் கண்டனப் போராட்டங்கள்
2013–14 காலகட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் காதர் முஹைதீன் தலைமையில் கண்டனப் பேரணிகள் நடந்தன.
இதனால் இந்திய அரசு வெளிநாட்டுக்கொள்கையில் இலங்கை தொடர்பான வாக்கெடுப்பில் மனித உரிமை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தள்ளப்பட்டது. இது சர்வதேசளவில் ஒரு அரசியல் அழுத்த வெற்றி.
இவ்வாறு சமூகநலப்போராட்டங்களில் பல்வேறு வெற்றிகளை தனது தலைமைத்துவத்தின் கீழ் பெற்றுக் கொடுத்தார்.
அவரின் சமூக நீதிக்காகப்போராடும் உயர்ந்த குணம், மொழிப்பற்று, மக்கள் பணிகளைக்கண்டு மறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் மாண்புமிகு கருணாநிதி பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களை தனக்கு நெருக்கமாக வைத்துக் கொண்டார்.
தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் இந்த உயர்வான “தகைசால் தமிழர் விருதை” பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு வழங்கியதுடன், மிகப்பொருத்தமான ஒருவருக்கு வழங்கியதில் திருப்திப்படுவதாக பெருமிதமடைந்தார்.
அரசியலில் எதிர்முகாமிலிருப்பவர்களும் பேராசிரியருக்கான கன்னியத்தைக் கொடுப்பதற்கு ஒரு போதும் தவறுவதில்லை.
இவ்வாறு பல முக்கிய அரசியல் தலைவர்களின் கண்ணியத்தையும், நெருக்கத்தையும், நன்மதிப்பையும், வாழ்த்தையும் தன் வாழ்நாளில் பெற்றவராக பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் திகழ்கிறார்.
அவர், இளமைப்பருவம் தொடக்கம் தற்போது வரை தான் ஏற்றுக்கொண்ட பல பணிகளை சிறப்பாக மேற்கொண்டு தனக்கான தனித்துவமான இடத்தை மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்டார்.
அரசியல் ரீதியாக பெரும் பதவிகளைப்பெற்றுக் கொண்ட போதும் மற்றவர்களுக்கு உதாரணமாக எளிமையான வாழ்வையே இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறார். தனது ஊதியத்தையும் மாணவர்களின் கல்விக்காக செலவு செய்து வருகின்றார்.
சமூகத்திற்கான வழிகாட்டியாகவும், அதன் நலனுக்காகப் பணியாற்றுபவராகவும் கருதப்படுவதால் "முனீருல் மில்லத்" (சமூகத்தின் ஒளி) என மக்களால் கௌரவமாக அழைக்கப்படுகிறார்.
பேராசிரியரின் உயர் பண்பு, ஆளுமை, அறிவார்ந்த பேச்சுக்களால் இந்தியாவில் மற்றுமன்றி தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகளிலும் அவரை நேசிக்கும் பல தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இலங்கை வாழ் முஸ்லிம்களைப்பொறுத்தவரை இந்திய முஸ்லிம்களை தொப்புள் கொடி உறவாகத்தான் பார்க்கிறார்கள். இலங்கை முஸ்லிம்கள் விவகாரங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கரிசணையோடு கடந்த காலங்களில் தங்களால் முடிந்த பங்களிப்புகளை வழங்கி வந்திருக்கிறது.
இலங்கையிலுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்களோடு தொடரான நெருக்கத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொண்டு வருகிறது.
இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத்தலைவர் உட்பட ஏனைய நிருவாகிகளுக்கும் இலங்கையிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம்களின் ஆதரவைப்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர், சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது.
பேராசிரியரை நேசிப்பவராகவும், அவரின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிப்பவராகவும், அவரின் வழிகாட்டல்களை ஏற்பவராகவும் ரவூப் ஹக்கீம் இருக்கிறார்.
எனவே தான், இந்திய - இலங்கை முஸ்லிம்கள் தொப்புள் கொடி உறவைப்பலப்படுத்தவும், முஸ்லிம்கள் ஒரு சமூதாயமாகப்பரந்துபட்டவர்கள் என்ற அடிப்படையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அதன் தலைவரின் உறவு இன்றியமையாதவொன்றாக இலங்கை முஸ்லிம்களுக்கு இருப்பதால் “தகைசால் தமிழர்” என்ற உயர்வான விருது மிகத்தகுதிவாய்ந்த பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றதையிட்டு இலங்கை முஸ்லிம்களும் பெருமிதம் கொள்கின்றார்கள்.
அந்த வகையில், இலங்கையில் இம்மாதம் (செப்டம்பர்) 19 ம் திகதி தலைநகர் கொழும்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் மற்றும் இலங்கையர்களோடு நட்புறவு கொண்ட திருச்சி ஊடகவியலாளர் சாகுல் ஹமீத் ஆகியோர் இணைந்து "தகைசால் தமிழர்" விருது வென்ற மூத்த அரசியல் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத்தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு இலங்கையில் கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பல தலைமுறை கண்ட பேராசிரியர் எல்லோருக்கும் சிறந்த முன்மாதிகளுடையவராகத்திகழ்கிறார். எதிர்கால சந்ததிகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகவே தனது வாழ்வியலை அமைத்துக் கொண்டிருக்கிறார். நாடு கடந்து பலரது கவனத்தை ஈர்த்த தலைவராகவும் இருக்கிறார்.
இவ்வாறான உயர்ந்த ஆளுமைச்சிறப்புகளுடன் வாழ்ந்து வருகின்ற பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களை வாழ்த்துவதற்கு எனக்கு வயது, அனுபவம் போதாது.
எனினும், அவரின் எளிமையான வாழ்க்கை, நற்குணங்கள், வீரியமிக்க பேச்சு ஆகியவற்றைக் கண்டு வியந்து போகும் இளைஞனாக, அவரிடமிருந்து வாழ்வுப் பாடங்களைப் பெறுகிறேன்.
அவரது வாழ்வியல் ஒரு நூலாகத்தொகுக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு வழங்கப்பட வேண்டும். அது நிகழ்ந்தால், நிச்சயம் சமூக அக்கறையுடனும், நெறியுடனும், நல்ல அரசியல் பண்புகளுடனும் கூடிய புதிய தலைமுறைத் தலைவர்கள் உருவாக பாடமாகவும் அறிவுரையாகவும் இருக்கும்.
பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அறிவார்ந்த சமூதாயத்திற்கும், எதிர்கால சந்ததிக்கும் மிகப்பெரும் பொக்கிஷம் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்திருக்க முடியாதென்பது நிதர்சனம்.
இவ்வளவு பொருத்தமான ஒருவருக்கு “தகைசால் தமிழர்” விருதினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நாடு கடந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இலங்கையில் மாபெரும் கௌரவம் மூத்த அரசியல் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு வழங்கப்படுவதை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நிருவாகிகள், ஆதரவாளர்கள், அபிமானிகள், இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் தமிழக மக்கள், கடல் கடந்து வாழும் அன்னாரை நேசிக்கும் நல்லுள்ளங்கள் அனைவரும் பெருமிதம் கொள்வார்கள் என்பது திண்ணம்.
எம்.என்.எம்.யஸீர் அறபாத் இளங்கலை மாணி பட்டதாரி (B.A.), தீவு முழுவதற்குமான சமாதான நீதவான், சமூக செயற்பாட்டாளர் – ஓட்டமாவடி.
No comments