இலங்கை கடற்படையினால் பாதுகாப்பாக மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைத்த தகவலின்படி இலங்கை கடற்படையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மூலம் இலங்கையில் மேற்கு கடற்கரையின் கடற்பரப்பில் ஆபத்தில் இருந்து இந்திய மீன்பிடி படகில் இருந்த நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (06) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 29 ம் திகதி ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக இந்திய மீன்பிடி கப்பல் காணாமல் போய் உள்ளதாக மும்பாய் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை கடற்படை உடனடியாக அனைத்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதன்படி மேற்கு கடற்கரை கட்டளையுடன் இணைக்கப்பட்ட விரைவு தாக்குதல் கப்பல்களால் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையில் சிலாபத்திற்கு அப்பால் மேற்கு கடல் பாதிக்கப்பட்டு செயல்படாமல் இருந்த இந்திய மீனவ கப்பல் அவதானிக்கப்பட்டதுடன் மேலும் அதில் இருந்த நான்கு இந்திய மீனவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மேற்படி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட நான்கு இந்திய மீனவர்களும் இந்தியாவின் மினிகோய் தீவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் திக்கோ விட்ட துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரால் கூடுதல் உதவி வழங்கப்பட்டு ஆரம்ப மருத்துவ பரிசோதனகளின் பிறகு நான்கு இந்திய மீனவர்களும் வத்தளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments