"அதிபர் திலகம்" யூ.எல். நஸார் இன்றுடன் தனது பதவியிலிருந்து ஓய்வு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையின் அதிபர் "அதிபர் திலகம்" யூ.எல். நஸார், இன்று (ஜுன் 12) தனது 60 ஆவது வயதில் ஓய்வு பெறுகின்றார்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநாகரத்தில் உள்ள ஓர் அழகு நிறைந்த பிரதேசமான சாய்ந்தமருதூரில் அப்துல்லாஹ் உதுமாலெப்பை இஸ்மாலெப்பை உதுமாநாச்சி தம்பதியினருக்கு 06ஆவது பிள்ளையாக 1965.06.13 அன்று யூ.எல்.நஸார் பிறந்தார்.
சிறு வயதிலிருந்தே கல்வியிலும், ஒழுக்கத்திலும் முன்னோடியாக விளங்கிய இவர், தனது கல்விப்பயணத்தை கமு/கமு/அல்-கமறூன் பாடசாலையில் ஆரம்பித்து, இடை நிலை, உயர் கல்வியை கமு /கமு / ஸாஹிராக் கல்லூரியில் கற்றார். உயர்தரப் பரீட்சையில் 1986ஆம் ஆண்டு கலை வணிகப் பிரிவில் தோற்றி, சிறந்த பெறுபேற்றினைப் பெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஒரே மாணவர் இவர் மட்டுமே என்பது இங்கு குறிப்பிடத்தக்க சிறப்புக்குரிய விடயமாகும். இவ்வாறு கல்வியில் சிறந்து விளங்கிய இவர், 86/87 காலப்பகுதியில் கிழக்குப் பல்கலைக்கழகம் சென்று கல்வி கற்றார். நாட்டிலேற்பட்ட உள் நாட்டுக் குழப்பங் காரணமாக தும்பறை வளாகத்திற்கு மாற்றப்பட்டு, சிறிதுகாலம் கல்வி கற்று பின்னர் பேராதனை வளாகத்திற்கு இடமாற்றப் பட்டார். அங்கே பல்கலைக்கழக கல்வியை 1993ஆம் ஆண்டு நிறைவு செய்தார். இவ்வாறு பட்ட மேற்படிப்பை திறந்த பல்கலைக்கழகத்திலும் ஆசிரியர் பயிற்சியை மஹரகம தேசிய கல்வி நிறுவகத்திலும் பெற்றார். மேலும் தென் கிழக்கு பல்கலைக் கழகத்திலும் Diploma In Counselling பட்டத்தினைப் பெற்றார்.
இவ்வாறு கல்வியில் சிறந்து விளங்கிய இவர், 1988ஆம் ஆண்டு போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டு கமு/கமு/அல் ஜலால் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையேற்றுக் கொண்டார்.
அன்றிலிருந்து தனது ஆசிரிய பணியினை தொடங்கிய இவர், "வாழ்க்கையின் ஒவ்வொரு படியினையும் கடமையின் பண்புடன் கடந்தவர்" தோழமையுடனும் தொலை நோக்குடனும் தனிப்பட்ட ஒழுக்கமும் தொண்டும் கொண்ட ஒருவர், தனது வாழ் நாளில் கல்வி என்னும் ஒளியைப் பரப்ப ஒவ்வொரு நொடியினையும் அர்ப்பணித்தவர். நீண்ட காலமாக புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையாமல் இருந்த அல்-ஜலால் பாடசாலையில் 1995ஆம் ஆண்டு இடம் பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 5 மாணவர்களை சித்தியடைய வைத்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.
வழிகாட்டும் ஒளியாக மாணவர் வாழ்க்கையில் திகழ்ந்த இவரது நடைமுறைகள் அவர்களது சொற்களிலும், செயல்களிலும் சிறந்த ஆளுமையை வளர்த்தது. இவ்வாறு தனது ஆசிரிய வாழ்க்கையை ஒளி வீசும் விளக்காக மாற்றியவர்.
1996இல் கமு/கமு மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்று, அங்கே 2009.06ஆம் மாதம் வரை கடமையாற்றினார் அக்காலப்பகுதியில் O/L பகுதித் தலைவராக இருந்து அங்கு மேலதிக வகுப்புகளை ஆரம்பித்து சிறந்த பெறுபேறுகளை அடைவதற்கு உதவியாக இருந்தார்.
சுனாமியின் பின்னர் அப் பாடசலையை பிரதான வீதிக்கு கொண்டு வருவதற்கும் பழைய மல்ஹருஸ் ஸம்ஸ் இருந்த இடத்தில் லீடர் அஷ்ரப் பாடசாலை அமைவதற்கும் பிரதான ஏற்பாட்டாளர்களில் ஒருவராக இருந்தார். அறிவுக்கும், அனுபவத்திற்கும் சமநிலை கொண்ட ஒரு மனிதர் மாறாத நேர்த்தியும் மாறாத நீதியும் இவருடய அடையாளங்களாக இருந்தன.
இவரது கல்விப் பயணம் இவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்கையில், 1997ஆம் ஆண்டு 7ஆம் மாதம் 3ஆம் திகதி மொஹம்மட் முகைடீன் பர்ஸானா என்பவரைக் கரம்பிடித்து இல்லற வாழ்க்கையில் இணைந்தார். இவர்களுக்கு 1998ஆம் ஆண்டு நஸார் மொஹம்மட் அஜாஸ் பலூமி எனும் ஆண்குழந்தையும், 1999ஆம் ஆண்டு நஸார் பாத்திமா குல்சான் ரஸ் அதா எனும் பெண் குழந்தையும் கிடைத்தது. தற்போது இவர்களது மூத்த மகன் மொஹம்மட் அஜாஸ் பலூமி நில அளவையாளர் பட்டம் பெற்று ஜோன் கொத்தலாவ பல்கலைக் கழகத்தில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். இவரது மகள் தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தொழிநுட்ப பீடத்தில் இறுதி வருட மாணவியாகக் கற்றுக் கொண்டிருக்கின்றார்.
இதன் பிற்பாடு தொடர்ச்சியான அவரது கல்விப் பயணத்தில் 2009ஆம் ஆண்டு வெளி வலய இடமாற்றத்தில் பொத்துவில் அல்-அக்ஸா பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுச் சென்றார். அங்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் கடமையற்றினார். அக்காலப்பகுதியிலேயே அதிபர் தரம் கிடைக்கப் பெற்று 2010ஆம் ஆண்டு G.M.M.S பாடசாலைக்கு இடமாற்றம் கிடைத்து வந்தார். அங்கு பிரதி அதிபராகக் கடமையேற்று வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருந்த அப்பாடசாலையை பழைய றோயல் கல்லூரியின் நிலைக்கு கொண்டு வருவதற்காக திடசங்கற்பம் பூண்டு அந்நிலையை அடைவதற்கு அரும்பாடுபட்டு உழைத்தார். பின்னர் 2017ஆம் ஆண்டு அக் கல்லூரியின் அதிபராகக் கடமையேற்று அப்பாடசாலையின் பௌதீக, கல்வி அபிவிருத்திக்கு அரும் பாடுபட்டு உழைத்து அப்பாடசாலையை பழைய றோயல் கல்லூரியின் நிலைக்குத் தரமுயர்த்தி தனது கனவை நிறைவேற்றினார். இதற்கு 2019இல் கிடைக்கப் பெற்ற புலமைப் பரிசில் பெறுபேறுகள் சான்று பகிர்கின்றன. வெறும் 4 மாணவர்கள் மாத்திரமே புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கொண்டிருந்த வேளையில் 19 மாணவர்கள் சித்தியடையும் நிலைக்குத் தரமுயர்த்தினார். அன்று அவர் வித்திட்ட பல திட்டங்கள் இன்றும் பல மாணவர்களின் வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இதன் பிற்பாடு 2021ஆம் ஆண்டு சாய்ந்தமருதின் பிரபல. பாடசாலையாகத் திகழும் கமு/கமு அல் ஹிலால் வித்தியாலயத்திற்கு தரம் 1 அதிபராக இடமாற்றம் கிடைத்துச் சென்று அங்கும் தனது திறமைகளை மேலோங்கச் செய்து அப்பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக 57 மாணவர்களை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையச் செய்து தனது திறமையைப் பறைசாற்றினார். அது மாத்திரமன்றி இப்பாடசாலையில் முதற் தடவையாக பல போராட்டங்களுக்கு மத்தியில் க.பொ.த (சா/த)ப் பிரிவினைத் தோற்றுவித்தார். இவ்வாறு கல்வி அபிவிருத்தியில் மாத்திரமன்றி அப்பாடசாலையின் பௌதீக அபிவிருத்தியிலும் அரும்பாடுபட்டு உழைத்தார். இதன் ஆரம்பக் கட்டமாக நூலகத்துடன் இணைந்த மூன்று மாடிக் கட்டடத் தொகுதியைப் பெற்றுத்தந்தார். அதனைத் தொடர்ந்து அதிபர், பிரதி அதிபர். உதவி அதிபர் காரியாலயங்களையும் புனர் நிர்மாணம் செய்தார்.
முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமாகிய எச்.எம்.எம்.ஹரீஸின் கடந்த அரசாங்கத்தின் D-100 வேலைத்திட்டத்தின் மூலம் பாடசாலை நீண்ட நாள் தேவையாக இருந்த ஆசிரியர்களின் ஒய்வறையுடன் கூடிய வகுப்பறையொன்றும் நிர்மாணிப்பதற்கு பாடு பட்டுழைத்தார். அத்தோடு, வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீமின் வழிகாட்டலுடன் கல்முனை கல்வி மாவட்டத்தின் பிரதம பொறியியலாளரும் இப்பாடசாலையின் முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமாகிய ஏ.எம். ஸாஹிரின் அயராத முயற்சியின் பலனாக பாடசாலைக்கு டென்னிஸ் கோட் ஒன்றினையும் இங்கு கொண்டு வருவதற்கு அரும்பாடுபட்டுழைத்தார். மேற்படி கட்டடத் தொகுதிகள் வேலைத்திட்டங்கள் இப்பாடசாலையில் உருவாக்கம் பெறுவதற்கு ஸாஹிர் இன்ஜினியரின் அனுசரணையுடன் இவ் அனைத்தையும் சாதித்தார். அது மாத்திரமன்றி கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக Smart Board ஒன்றினை இப்பாடசாலைக்கு மிகவும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் கொண்டு வந்தார். அத்தோடு, இப்பாடசாலையில் இல்லாமலிருந்த போட்டோ கொப்பி மெசின், பிரிண்டர், கணினி, லெப்டொப் போன்ற அத்தியாவசிய கருவிகளையும் மண்டபத்திற்கான கதிரைகள், நூலகத்திற்கான பெறுமதிமிக்க நூல்கள், அதிபர்களுக்கான காரியாலய கதிரை மேசைகள், கொன்பிரன்ஸ் மேசை, ICT லெப்பிற்கான கதிரைகள், அலுமாரிகள் போன்றவற்றினை அரசியல் வாதிகள், தனவந்தர்கள் மூலமாக கொண்டு வந்து சேர்த்த பெருமை இவரையே சாரும்.
இலங்கையின் கல்வி வரலாற்றில் முதல் முறையாக தகுதியினை நிர்ணயித்து வழங்கப்பட்ட குரு பிரதீபா விருதில் கிழக்கு மாகாணத்தில் இருந்து 3 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன அதில் அல்-ஹிலால் அதிபருக்கும் ஒரு பிரதி அதிபருக்கும் ஒரு உதவி அதிபருக்கும் ஓர் ஆசிரியருக்கும் குரு பிரதீபா விருது கிடைத்தது வரலாற்று சாதனையாகும்.
அது மாத்திரமன்றி 15 வருடகாலமாக இப்பாடசாலையில் இடம்பெறாமல் இருந்த பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியினை 2025ஆம் ஆண்டு விளையாட்டு மைதானமே இல்லாத இப்பாடசாலையில் விளையாட்டு நிகழ்வுகளை மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்து அதனை மிகவும் விமர்சையாகவும் கோலாகலமாகவும் நடத்தி முடித்த ஒரு சாதனை நாயகன் இவரென்பதும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிகழ்வாகும்.
இப்பாடசலை வரலாற்றில் முதல் தடவையாக வலயக்கல்விப் பணிப்பளார் சஹ்துல் நஜீம், கணக்காளர் ஹபீபுல்லா ஆகியோரின் உதவியுடன் பேண்ட் வாத்தியக் கருவிகளைப் பெற்று இப்பாடசாலையில் பேண்ட் குழுவொன்றை ஆரம்பித்தமை இவரது துணிச்சல் மிகு சாதனைகளில் ஓர் அங்கமாகும். இவ்வாறு தனது சேவையின் மூலம் பொறுப்புடனும், பண்புடனும் மாணவர்கள் மனதில் கல்வியை விதைத்தவர். தனது சேவையின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நொடியையும் பாடசாலையின் வளர்ச்சிக்காகச் செலவிட்டவர், தூய்மையான நிர்வாகத்தின் உதாரணமாக பாடசாலையை உயர்த்தியவர், அவரது நேர்மையும் துணிவும் எங்கள் அனைவருக்கும் உந்து சக்தியாக இருந்தது.
மேலும் இவர் பாடசாலை வாழ்க்கையில் மாத்திரமன்றி பொதுச் சேவையினுள்ளும் சமூகத்தின் நலனுக்காக தன்னலமின்றி செயற்பட்டார். இவர் சமூகத்திற்கு செய்த சேவைகளாக, ஜமாஹிரியா விளையாட்டு சமூக சேவை கழகம் ஆரம்பிக்கப்பட்டு அதன் முதற் செயலாளராக இருந்து மக்களுக்கு அளப்பறிய சேவைகள் செய்தார்.
சுனாமிக்குப் பின்னர் மக்கள் மன்ற அமைப்பாளராக இருந்து ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகளைச் செய்தார்.
முதன் முதலாக சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிக்கு ஒரு கணினித் தொகுதியையும், பிரிண்டரினையும் மக்கள் மன்றத்தின் அமைப்பாளராக இருந்து பெற்றுக் கொடுத்தார்.
மஸ்ஜிதுல் பத்தாஹ் பள்ளிவாசலின் செயலாளராக இருந்து ஜப்பானிய தூதரகத்தின் உதவியுடன் ஒரு கட்டடத் தொகுதியினைக் கொண்டுவந்தார். அப்பள்ளிவாசலினுள் அமைச்சர் அதாஉல்லாஹ்வினது உதவியுடன் நிலத்தினுள் டைல்ஸ் பதிப்பதற்கும் ஏற்பாடுகளைச் செய்தார்.
சாய்ந்தமருதில் DS Office இனைப் பெறுவதற்கு மக்களை விழிப்பூட்டும் பணியினை தனது நண்பர்களுடன் இணைந்து செய்தார்.
இவ்வாறு இவரது சமூக சேவைகளும் விரிந்து கொண்டு செல்கின்றன.
அண்மையில் இவரது சேவையைக் கௌரவிக்கு முகமாக பாடசாலை சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் அவர்களால் "அதிபர் திலகம்" பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்டார்.
இவர் ஓய்வு பெற்றுச் செல்லும் இவ்வேளையிலும் பாடசாலையின் நலன் கருதி 2.5 மில்லியன் வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்து வைத்து செல்வதும் குறிப்பிடத்தக்கது.
இவரது ஓய்வுகாலம் சிறப்பாக அமைய வேண்டும் என பாடசாலை சமூகம் இவரை வாழ்த்துகிறது.
No comments