அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெறும் தேசமானி அஷ்ஷெய்க் எம். யூ. எம். ஷரீக் (கபூரி) கல்வித்துறையில் ஆளுமை.
1970ஆம் ஆண்டு 05ம் மாதம் 02ஆம் திகதி புத்தளம் மாவட்டத்தில் புளிச்சாக்குளம் கிராம சேவகர் பிரிவில் புதுக்குடியிருப்பு எனும் பிரதேசத்தில் ஆசிரியர் மர்ஹும் உமர் சித்தி ஹைரியா ஆகியோரின் தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாக பிறந்த இவர், ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலை கல்வியை புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தார். 1983ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றையும் பெற்றார்.
1983ஆம் ஆண்டு முதல் அரபு அல்ஆலிம் பட்டப்படிப்பை மகரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் இணைந்து அல்-ஆலிம் (கபூரி) பட்டத்தையும் பெற்றார்.1995ம் ஆண்டு BA பட்டத்தை பேராதெனிய பல்கலைக்கழகத்திலும் 2011ம் ஆண்டு MA பட்டத்தை இந்தியா காமராஜர் பல்கலைக்கழகத்திலும் நிறைவு செய்தார்.
இலங்கை அரச சேவையில் தடம் பதித்தார். அத்துடன் 1993 ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை தாராக்குடிவில்லு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி அதே பாடசாலையில் தொடர்ந்து அதிபராக 2007 முதல் 2016ம் ஆண்டு வரை தனது சேவையை வழங்கினார் அதன் பின்னர் தொடர்ந்து தான் ஆரம்பக்கல்வியை படித்த புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்திற்கே 2016ம் ஆண்டு அதிபர் நியமனம் பெற்று 2025 வரை அதிபராக கடமையாற்றினார்.
2006ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை கத்தார் நாட்டில் கடமையாற்றி கத்தார் நாட்டில் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான நிறுவனத்தில் பணியாற்றக் கூடிய சந்தர்ப்பமும் கிடைத்தது. இக்காலத்தில் உலகின் பல்வேறுபட்டவர்கள் மத்தியில் சிறப்பாக பணியாற்றி தனது சுய ஆளுமைகளையும் வளர்த்துக்கொண்டார்.
சுமார் 32 வருடங்கள் ஆசிரியராக, உப அதிபராக, அதிபராக கடமையாற்றிய காலப்பகுதியில் ஏராளமான பட்டதாரிகளை, வைத்தியர்களை, நீதிபதிகளை உருவாக்கியதோடு பாடசாலையின் அனைத்து அடைவு மட்டங்களும் உயர்ந்தது சிறப்பம்சமாகும்.
தன்னுடைய சேவை காலத்தில் புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தில் உட்கட்டமைப்பு மேம்பாடுகள், சுத்தமான சுற்றுச்சூழல், சிறப்பான நிர்வாக ஒழுங்கமைப்பு என பல்வேறு அபிவிருத்திகள் காணப்பட்டதோடு மாணவர்களின் கல்வி மட்டங்களும் மாவட்ட, தேசிய ரீதியில் பேசக்கூடிய அளவில் முன்னேறியது. அது மட்டுமல்லாது பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள், விளையாட்டு நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் என்பவற்றிலும் மாணவர்கள் பாடசாலையின் பெயரை உயர்த்தினார்.
இவ்வனைத்து வளர்ச்சிக்கு பின்னாலும் அதிபர் எம். யூ. எம். ஷரீக் (கபூரி) அவர்களின் நிர்வாக ஒருங்கமைப்பு நேரடி பங்களிப்பும் முதுகெழும்பாக இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதிபர் சேவையின் இறுதிக்காலம் என்று ஓய்வெடுக்கவுமில்லை, நாட்டில் நிலவிய அசாதாரண சூழலை கண்டு பயந்து விடவுமில்லை. தான் கற்ற கல்வி மற்றும் அனுபவம் மூலம் எதிர்நீச்சலுடன் இரவு பகலாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பாடசாலை அபிவிருத்திக்கும் பங்காற்றியதோடு அரசிடம் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாத காலப்பகுதியிலும் கூட அரச சார்பற்ற நிறுவனத்தின் ஊடாக புதிய கட்டிடம் ஒன்றை நிர்மாணித்து பாடசாலையின் உட்கட்டமைப்பில் கம்பீரமான தோற்றத்தை வழங்கி இன்று பிராந்தியத்தில் பாடசாலையின் பெயர் சொல்லக்கூடிய அளவிற்கு முன்னேற்றி இருப்பது மிகப்பெரிய சேவையாகும்.
இவ்வளவு வேலைப்பளுவுக்கு மத்தியிலும் அகில இலங்கைக்குமான சமாதான நீதவானுமாகிய அஷ்ஷெய்க் எம்.யூ.எம். ஷரீக் (கபூரி) தனது சிறு பிராயம் முதல் சமூக சேவையில் அர்ப்பணித்ததோடு புதுக்குடியிருப்பு முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜித் (மர்கஸ்) 1995ம் ஆண்டு முதல் தலைவர் செயளாலர் என சகல பதவிகளிலும் கால்பதித்து மாபெரும் சேவையை இன்று வரை தியாகத்தோடு பல சிரமங்களுக்கு மத்தியில் தனது தலைமைத்துவத்தில் புதுக்குடியிருப்பு சமூகத்தை வழிநடத்துகின்றார் என்பது பாராட்டத்தக்க விடயமாகும்.
புதுக்குடியிருப்பு
என். எம். ஹபீல் கபூரி,JP)
No comments