முஸ்லிம் காங்கிரஸ் சபைகளை இழந்தமைக்கு பொறுப்பு கூறுவது யார் ?
எந்தவொரு அரசியல் கட்சியும் கூட்டுப் பொறுப்புடன் உழைத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். ஆனால் முஸ்லிம் காங்கிரசில் உள்ள சிலர் அவ்வாறல்ல. காலாகாலமாக தான் மட்டுமே கட்சியில் உயர் பதவிகளையும், அரசியல் அதிகாரத்தையும் அனுபவிக்க வேண்டுமென்று எண்ணுகின்றனர்.
அவ்வாறு எண்ணுவது தவறா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, தனது ஊரில் அல்லது மாவட்டத்தில் தனது இடத்தினை வேறு எவரும் அடைந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து சதிவலைகளை பின்னுகின்றனர்.
அதற்காக ஆளுமையுள்ள தனி நபர்கள், மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்கள், சமூகத்துக்கு அவசியமானவர்கள், துறை சார்ந்த நிபுணர்கள் யாராவது கட்சியில் இணைந்து பயணிக்க விரும்பினால் அவ்வாறானவர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.
அத்துடன் இவ்வாறான திறமைசாலிகள் ஏற்கனவே கட்சியில் இருந்து தங்களது ஆளுமைகளை வளர்த்துக்கொண்டால், உள்ளூர் பிரமுகர்களினால் திட்டமிட்டு கட்சியிலிருந்து வெளியேற்றி விடுகின்றனர்.
ஒவ்வொரு பிரதேசங்களிலும் இவ்வாறான சுயநலவாதிகளின் கரங்களில் கட்சியின் அதிகாரம் அகப்பட்டுள்ளதன் காரணமாகவே இன்று முஸ்லிம் காங்கிரஸ் சில பிரதேசங்களில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் உள்ளூரில் செல்வாக்குள்ளவர்களாகவும், குடும்ப பின்னணியை கொண்டவர்களாகவும் இருப்பது அவசியம். அவ்வாறானவர்கள் பல இடங்களில் இந்த தேர்தலில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
கட்சிப் போராளிகளுக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால் எல்லா போராளிகளுக்கும் அதற்கான தகுதியும், மக்கள் மனதில் செல்வாக்கும் உள்ளதா என்பதனை போராளிகள் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
அவ்வாறு கட்சி போராளிகளுக்கு மாத்திரம்தான் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென்றால், பணம் படைத்தவர்களும், செல்வாக்கு உள்ளவர்களும் மாற்று அணியில் போட்டியிட்டு கட்சியை தோற்கடித்துவிடுவார்கள்.
அந்தவகையில் சில கட்சிகள் செல்வாக்குள்ளவர்களை தேடிப்பிடித்து தங்கள் கட்சியில் இணைத்து வெற்றியை நோக்கி செல்வது பாராட்டத்தக்கது.
தொடரும்......
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments