Breaking News

43 வது வருடத்தில் கால்பதித்திருக்கின்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் புத்தளம் எம்.யூ.எம். சனூன்

ஊடகத்துறைக்குள் பிரவேசித்து 2024 ம் ஆண்டுடன் 43 வருடங்களை நிறைவு செய்துள்ளேன். அல்ஹம்து லில்லாஹ்.


இதுவரை காலமும் எனது ஊடக பணிக்கு உறுதுணையாக இருந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


காலம் இவ்வளவு விரைவானதா என எண்ண தோன்றுகின்றது.


1981 ம் ஆண்டு க.பொ.த. உயர்தரம் விஞ்ஞான பிரிவில் ஒரு வருடம் மாத்திரம் கல்வி பயின்று விட்டு (பொருளாதார நெருக்கடியின் காரணமாக கல்வியை தொடர முடியாதால்) 17 வயதில் எனது ஊடக பணி ஆரம்பமானது. 


முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தினால் அன்று வெளியிடப்பட்ட "உதயம்" பத்திரிகையில் எனது பேனா முனை இளமையிலே மை தடவியது. (இன்று மீண்டும் அதே உதயம் பத்திரிகை உதயமாகியுள்ளதை எண்ணி புளகாங்கிதம் அடைகிறேன்)


இதனால்தான் அன்று எனது புனைப்பெயரை "உதயம் + இதயன் = உதயமிதயன்" என பெயர் சூடி எழுத்துலகில் சங்கமிக்க ஆரம்பித்தேன்.


எனது எழுத்துருவுக்கு ஆரம்ப கர்த்தா புத்தளம் அஷ்பா அஷ்ரப் அலி (அஷ்ரபலி காக்கா), எனது பள்ளிப்பருவ ஆசான்களான கலாபூஷணம் கவிஞர் ஜவாத் மரைக்கார், கலாபூஷணம் கலைஞர் எஸ்.எஸ்.எம்.ரபீக், எழுத்தாளர் கவிஞர் எம்.எஸ்.எம்.அப்பாஸ் ஆகியோர் என்றாலும் எனது ஊடக பணிக்கு வித்திட்டவர் முஸ்லிம் மீடியா போரம் இன்றைய தலைவர் என்.எம்.அமீன் சேர் ஆகும். 


கூடவே எனக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் முஸ்லிம் சேவை பணிப்பாளர் எம்.இஸட்.அஹமத் முனவ்வர், கவிஞர் சட்டத்தரணி ரஷீத் எம்.இம்தியாஸ் ஆகியோரும் வழி காட்டினர்.


உதயம் பத்திரிகையின் புத்தளம் நிருபராக 1981 இலிருந்து கடமையாற்றியது மட்டுமல்ல புத்தளம் நகர வியாபார நிலையங்களுக்கு ஏறி இறங்கி ஒரு பத்திரிகை தலா 03 ரூபாவாவுக்கு விற்று கொடுத்து அதன் வளர்ச்சிக்கு பங்காற்றியதையும் பெருமையோடு நினைவு கூறுகிறேன். 


இவ்வாறு உதயம் பத்திரிகையில் ஆரம்பமான எனது ஊடகப்பயணம் பின்னர் 26.02.1990 இல் லேக்ஹவுஸ் தினகரன் பத்திரிகையிலே எனது பயணம் தொடர்ந்தது. தினகரன் பத்திரிகையிலும் எனது இந்த சேவை பதவியினை தொடர என்.எம்.அமீன் சேர் அவர்களே வழிகாட்டி இருந்தார்கள்.


தினகரன் ஆசிரியராக அன்று கடமையில் இருந்த சிவகுருநாதன் சேர் முன்னிலையில் நேர்முக பரீட்சைக்கு தோற்றியதன் பின்னர் "புத்தளம் தினகரன் நிருபர்" எனும் பதவிதனை நான் பொறுப்பேற்றேன்..


அன்றிலிருந்து இன்றுவரை அதே பதவியை தங்கு தடை இன்றி செய்து வர காரணம் பத்திரிகை தர்மத்தை பேணி நான் கடமையாற்றும் பத்திரிகைக்கும், பத்திரிகை நிறுவனத்துக்கும் நம்பிக்கை நன்றி விசுவாசத்தோடு செயற்படுவதாகும்.


எனக்கு 'புத்தளம் தினகரன் நிருபர்' என்ற பதவியை அன்று புத்தளத்தில் நிருபராக கடமையாற்றிக் கொண்டிருந்த  எனது அறிவிப்பு துறை குரு, அறிவிப்பாளர் மர்ஹூம் ஆசிரியர் எம்.ஐ.ஏ.ரவூப் அவர்கள் தனது இந்த பதவியை தியாகம் செய்து, பதவி துறந்து எனக்கு இந்த பதவியை அலங்கரிப்பதற்கு வழி விட்டார். 


லேக்ஹவுஸில் நான் இந்த நிருபர்  பதவிதனை பெற்றுக் கொள்வதற்காக அன்று வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சராக இருந்த இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்கள் எனக்கான சிபாரிசு கடிதத்தை தந்து உதவியிருந்தார். அவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூறுகிறேன்.


தினகரன் நிருபர் பதவியை நான் பொறுப்பேற்ற பின்னர் 1996 ம் ஆண்டு காலப்பகுதியில்  ஊடகத்துறை டிப்ளோமா பாடநெறியை இலவசமாக மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் என்.எம்.அமீன் சேர் வழங்கி இருந்தார். அன்று ஊடகத்துறை அமைச்சராக இருந்த தர்மஸ்ரீ சேனாநாயக் அவர்களின் ஏற்பாட்டில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஒரு வருட காலம் இலவசமாக இந்த ஊடக டிப்ளோமா பாட நெறி வழங்கப்பட்டது. 


ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் நடாத்தப்பட்ட இந்த பாடநெறியில் தமிழ் மொழியில் கலந்து கொண்டு பேராசிரியர்களின் விரிவுரைகளை கற்று தேர்ந்து Diploma in Journalism (MTI) என்கின்ற பதவியையும் பெற்றுக்கொள்ள முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.


இவ்வாறு அன்றைய ஊடக பாடநெறியில் பயின்ற எனது நண்பர்கள் சிலரோடு இன்றும் நட்புகளை பேணி வருகிறேன். சித்தீக் ஹனிபா (ITN), லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்(Lake House), லேக்ஹவுஸ் மற்றும் தமிழ் மிரரில் கடமையாற்றிய ரம்ஸி குத்தூஸ், வாரியபொல ஐ.எல்.முஸம்மில் ஆகியோர் இன்றும் என்னோடு நட்புகளை பேணி வருபவர்கள்.    


அன்றைய பயிற்சி நெறியில் எம்மோடு ஒரு சகோதரியும் கலந்து கொண்டிருந்தார். எனது ஞாபகத்துக்கு எட்டிய வகையில் அவரது பெயர் சகோதரி நாதியா என நினைக்கிறேன். வாழ்த்துக்கள் சகோதரி நாதியா..


புத்தளம் நகரின் சிரேஷ்ட ஊடகவியலாளர் மர்ஹூம் ஏ.எஸ்.புல்கி அவர்களோடும், எனக்கு பிறகு ஊடகத்துக்குள் பிரவேசித்த மர்ஹூம்களான ஆசிரியர் எம்.ஐ.அப்துல் லத்தீப், ஆசிரியர் ஜே.இஸட்.அப்துல் நமாஸ் ஆகியோரோடும் இணைந்து பணியாற்றியுள்ளேன்.


ஊடக நண்பர் ஆசிரியர் ஜே.இஸட்.எம்.நமாஸ் நிறைய ஊடக பயிற்சி நெறிகளில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களையும் எனக்கு பெற்றுக்கொடுத்திருந்தார்.


என்.எம்.அமீன் சேர் அவர்கள் முஸ்லிம் மீடியா போரம் இல் அங்கத்துவத்தை வழங்கி எனது முயற்சிகளுக்கு வழி அமைத்திருந்தார்.


புத்தளம் நகர சபையின் நகர பிதாவாக கடமையாற்றிய மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் அவர்களின் ஊடக பொறுப்பாளராகவும் சில காலம் கடமையாற்றுவதற்கான சந்தர்ப்பங்களையும் அவர் எனக்கு பெற்றுக்கொடுத்திருந்தார்.


அச்சு ஊடகத்துக்குள்ளேயே முழுமையாக என்னை ஈடுபடுத்தி கொண்டதால் இலத்திரனியல் ஊடகங்களின் பக்கம் கவனம் செலுத்துவதை நான் தவற விட்டு விட்டேன்.


என்றாலும் 2020 இல் தோற்றுவிக்கப்பட்ட, 1980 ம் ஆண்டு புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் எனது சாதாரண தர பழைய மாணவர் குழுவினரின் "80ஸ் சஹீரியன்ஸ் ஹீரோஸ்" நண்பர் குழுவினர் எனக்குள் நீண்ட காலம் ஒழிந்து கிடந்த திறமைகளை வெளிக்கொணர்ந்து ஊக்குவித்தார்கள்.


குறிப்பாக இறைவன் எனக்கு வழங்கி உள்ள குரல் வளத்தை கண்டு, ஏதோ ஒரு இலத்திரனியல் ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராகவாவது கடமையாற்றி இருக்கலாமே என ஆதங்கப்பட்டார்கள்.எனக்குள் உள்ள திறமைகளை நான் இனங்கண்டு கொள்ளாமல் அச்சு ஊடகத்துக்குள்ளேயே மூழ்கி நான் பயணித்து விட்டேன்.


"இனி ஒரு விதி செய்வோம்" எனும் விதி மாறிவிட்டது.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதுக்கு ஐயா..விட்டுடுவோம்.


இன்றைய எனது தொழில் ரீதியான செயற்பாடுகளும் ஊடகத்துடனான செயற்பாடாகவே அமைந்துள்ளதை என்பதை நினைத்தும் சந்தோஷப்படுகிறேன்.


இலவச வாட்சாப் ஜனாஸா அறிவித்தல்கள், இலவச சமூகவியல் வாட்சாப் அறிவிப்புகள், கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பர வாட்சாப் அறிவிப்புகள், மேடை அறிவிப்புகள், ஒலிபெருக்கி சாதனங்கள் மூலமான தெரு அறிவிப்புக்கள் (Street Announcement) போன்றன எனது ஊடக பணியோடு பிண்ணிப்பிணைந்து விட்டது.


இன்று சமூக ஊடகங்களின் ஊடகவியலாளர்களோடும், இளம் ஊடக நண்பர்களோடும் முடியுமான வேகத்தில் எனது பயணம் தொடர்கிறது..எது வரை எனது பயணம் ...எங்கு போய் முடியும்..யாரறிவார்.


ஆடி அடங்கும்... வாழ்க்கையடா..

ஆறடி நிலமே ..சொந்தமடா..

ஆடி அடங்கும் வாழ்க்கையடா...


M.U.M.SANOON

DIP IN JURNALISM(MTI)

PUTTALAM.

0770 73 74 75

23.01.2024





No comments

note