எம்.யூ.எம்.சனூன், எம்.எச்.எம். சியாஜ்
பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் "தித்வா "புயலால் பாதிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத சிறு கைத்தொழிலில் ஈடுபட்ட பெண்களுக்கு வாழ்வாதார மீட்பு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையக காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (10) காலை இடம்பெற்றது.
தித்வா புயல் அனர்த்தத்தால் தங்களது தையல் இயந்திரங்கள் மற்றும் சுயதொழில் உபகரணங்களை இழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத சிறு கைத்தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் விசேட உதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வின் மூலம், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது சுயதொழிலை மீண்டும் ஆரம்பித்து, குடும்ப பொருளாதாரத்தை வலுப்படுத்தி, தன்னம்பிக்கையுடன் வாழ்வை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தேவையான உதவிகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
பெண்களின் பொருளாதார வலிமையையும் சமூக முன்னேற்றத்தையும் இலக்காகக் கொண்டு, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீள உருவாக்குவதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையக நிர்வாகத்தினர் இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளனர்.
ஒரு பெண்ணின் வாழ்வாதாரம் மீளும்போது, ஒரு குடும்பத்தின் எதிர்காலமும் மீண்டும் மலர்கிறது என்ற சிந்தனையை இத்திட்டம் மேலோங்க செய்துள்ளது.
இந்நிகழ்வில் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையக நிறைவேற்று பணிப்பாளர் ஜுவைரியா முஹைதீன், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச். நியாஸ், சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர், ஏ.சி.அசுருதீன் ஜே.பி. உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
















