JobVibe.lk - Sri Lanka Job Portal

தீர்வில் சகல சிறுபான்மை சமூகங்களும் நன்மையடைய உதவுங்கள் அமெரிக்க ராஜதந்திரியிடம் சிறுபான்மை தலைமைகளின் சந்திப்பில் ரவூப் ஹக்கீம்

ஜனாதிபதி ஒரு தரப்பினரை மட்டும் முன்னிலைப்படுத்தி தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண எத்தனிப்பதை விடுத்து, பாதிக்கப்பட்டுள்ள சகல சிறுபான்மை சமூகங்களும் நன்மையடையும்  விதத்தில் உரிய தீர்வைக் காண்பதுவே உகந்தது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தற்போது இங்கு விஜயம் செய்துள்ள அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்டிடம் வலியுறுத்தியுள்ளார். 


இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகை தந்துள்ளதாகக் கூறப்படும் துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட்டை சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் கொழும்பு, சினமண்ட் கிராண்ட் ஹோட்டலில் ் (1) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 


வடகிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அரசாங்கம் பலவந்தமாகக் கையகப் படுத்தியுள்ள காணிகள் அவற்றின் உரிமையாளர்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும் எனவும் ஹக்கீம் சுட்டிக் காட்டியுள்ளார். 


இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஷங்கும் பிரசன்னமாகியிருந்த இந்தச் சந்திப்பின் போது, பின்வரும் விடயங்களும் துணைச் செயலாளரிடம் சிறுபான்மைக் கட்சித் தலைவர்களால் முன் வைக்கப்பட்டவற்றில் சிலவாகும்:


பயங்கரவாத தடைச் சட்டம் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் முறைகேடாகக் கையாளப்பட்டு வருகின்றது. அத்துடன், ஜனநாயகத்தைச் சரிவரப் பேணுவதோடு, சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்திக்கப்பட வேண்டும். நீண்ட காலமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் அநேகர் சிறைகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 


ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அரசாங்கம் தொடர்ந்தும் செயல்படுத்தாமல் இருந்து வருகின்றது. 


நாட்டின் தேர்தல்களை குறிப்பாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாமலிருக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என்பன போன்ற விடயங்கள் சிறுபான்மைத் தலைவர்களால் எடுத்துக்  கூறப்பட்டன. 


அவற்றை இவ்விதமாக சிறுபான்மை அரசியல் தலைமைகள் கூட்டாக முன்வைக்கும் போது இலங்கை அரசாங்கத்திற்கு அவை தொடர்பில் உரிய அழுத்தம் கொடுக்கப்படும் என துணைச் செயலாளர்  நுலண்ட் கூறியுள்ளார். 


சிறுபான்மைத் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களுமான பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம், தர்மலிங்கம் சித்தார்த்தன், ரிஷாட் பதியுத்தீன், எம்.ஏ. சுமந்திரன், மனோகணேசன், கஜேந்திரகுமார், பொன்னம்பலம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال