பொருளாதார நெருக்கடி : முஸ்லிம் எம்.பி.க்களும் பொறுப்புக் கூறுவார்களா?
எஸ்.என்.எம். சுஹைல்
நாடு பொருளாதார ரீதியிலும் சரி அரசியல் மற்றும் நிர்வாக ரீதியிலும் மிக மோசமாக சீரழிந்துள்ளது. மக்கள் அன்றாட வாழ்வைக் கடத்துவதில் தினம் தினம் மிகுந்த கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
டொலர் இல்லா திண்டாட்டத்தால் எரிபொருள் இறக்குமதி தடைப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த பொருளாதார நிலையும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
முடியாட்சிக் காலத்தில் இலங்கை தன்னிறைவுப் பொருளாதாரத்தை கொண்ட நாடாக காணப்பட்டது. எனினும், அக்காலப்பகுதியில் யானைத்தந்தம், முத்துக்குளிப்பு,வாசனைத்திரவியங்கள் என்று ஏற்றுமதிகள் இருந்ததாக மகாவம்சம் கூறுகின்றது.
இலங்கை, குடியேற்ற காலத்தில் கறுவா, தேயிலை, இறப்பர், தென்னை போன்ற வர்த்தகப் பயிர்களுக்கு பெயர் பெற்று விளங்கியது. நாடு சுதந்திரம்பெற்ற பின்னர், முதலாளித்துவ பொருளாதாரத்தை சிறிது காலமே பின்பற்றிய போதிலும் அது ஆசியாவிலேயே மிக முன்னேற்றகரமான பற்பல சமூக நல நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. ஆனால் 1956 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முழுக்க முழுக்க சமவுடமை பொருளாதாரத்தை கைக்கொள்ளத்தொடங்கியது. பின்னர் 1970 ஆம் ஆண்டு மூடிய பொருளாதார முறைமையை பின்பற்றியமையால் நாடு பட்டினி நிலைமைக்குத் தள்ளப்பட்டாலும் மெல்ல மெல்ல தன்னிறைவடையும் நிலைக்கு செல்ல முயற்சித்தது. என்றாலும், அன்றைய அரசாங்கத்தின் மூடிய பொருளாதார கொள்கையை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் விளைவாக 1977 ஆம் ஆண்டு திறந்த பொருளாதார கொள்கையை முன்னிறுத்திய ஜே.ஆர். அரசாங்கம் பெரு வெற்றியுடன் ஆட்சியமைத்தது. பின்னர் வந்த அரசாங்கங்கள் அதே கொள்கையையே பின்பற்றின.
இப்போது சிங்கள தேசியவாதம், பொருளாதார மேம்பாடு, தேசிய பாதுகாப்பு என்று தேர்தல் பிரசாரத்தின் பிரதான பேசுபொருளாக கொண்டு 2019 இல் ஆட்சிக்கு வந்த கோத்தபாய ராஜபக்சவின் அரசாங்கம் எந்த பொருளாதார கொள்கையை பின்பற்றுகின்றது என அறிந்துகொள்ள முடியவில்லை. இன்று அவரிடம் தெளிவான பொருளாதாரக் கொள்கை இல்லை என்பது நன்கு வெளிப்பட ஆரம்பித்துள்ளது.
19 ஆவது திருத்தம் மூலம் நிர்வாகத் துறைக்கு அதிகாரம் இல்லாதிருந்தபோது மீண்டும் நிறைவேற்று அதிகாரத்தை வழங்கியது அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தமாகும். இதன்மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரம் குறைவடைந்ததுடன் பாராளுமன்ற ஆட்சி முறைமையும் பாதிக்கப்பட்டன. சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறியாகியது.
இதன் விளைவாகவே இன்று நாட்டில் ஒரு குடும்பத்தினரே அனைத்தையும் தீர்மானிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அத்தோடு, அவர்களின் தேர்தல் வியாபாரத்துக்கு துணைபோகும் பெரு வணிகர்களே சில விடயங்களை நிர்வகிக்கும் நிலைமை தோன்றியிருக்கிறது.
“நாட்டில் 17 அத்தியவசிய பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அரசாங்கம் பெற்றிருந்தது. எனினும், கடந்த நவம்பரில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கமைய அந்த அதிகாரத்தை இன்று வர்த்தகர்களே பெற்றுள்ளனர். அரிசியின் விலையை கட்டுப்படுத்துபவர் ஒரு வியாபாரியாவார். எரிபொருள் விலைகளை ஐ.ஓ.சி. கட்டுப்படுத்துகின்றது. இப்படி வியாபாரிகளே இன்று சந்தை விலை கட்டுப்பாட்டை கையில் வைத்துக்கொண்டு நினைத்ததுபோல் விலை ஏற்றம் செய்கின்றனர்” என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.
“ஜனாதிபதி தனக்கான அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றார். நினைத்தபடி வர்த்தமானிகளை வெளியிடுவதும், யாரோ ஒரு தரப்பின் பேச்சைக் கேட்டு அதனை வாபஸ் பெறுவதுமாக நாட்டின் நிர்வாகத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறார். நிர்வாகத் திறன் இன்மையே இன்றைய பிரச்சினைகளுக்கு காரணம்” என்று குற்றம் சாட்டினார் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவளித்து ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரத்தை கொடுத்தமை, அதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரத்தை பலப்படுத்தி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சுக்கு கொண்டுவந்தமை மற்றும் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொடுத்து தான்தோன்றித்தனமாக செயற்பட வழிவகுத்தமை இன்னொரு சாபம் என்றும் இம்ரான் எம்.பி. கடுமையாக சாடினார்.
நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு அதிகரித்திருக்கின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு மின் துண்டிப்பு ஏற்படுகிறது. அத்தியவசியப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றன. எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பலரின் வீடுகளில் சமையல் நடைபெறுவதில்லை. கடைகளில் வாங்கிச் சாப்பிடலாம் என்று வெளியில் சென்றால் கடைகளும் பூட்டிக் கிடக்கின்றன. இதனால், மக்கள் பசி படினியுடன் நாட்களை கடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
கடந்த நவம்பர் மாதத்தில் பாராளுமன்றில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த மார்ச் மாதத்தில் ஏற்பட இருக்கும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின் விநியோக நெருக்கடிகள் சம்பந்தமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்க நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. ஆளும் தரப்பினர் பொடுபோக்காவே பதிலளித்து ரணிலை சாடியதுடன் அரசாங்கம் திடமாக இருப்பதாக கூறினர்.
ரணில் அன்று பாராளுமன்றில் சுட்டிக்காட்டியதுபோல் இன்று நாட்டின் நிலைமை மோசமடைந்திருக்கிறது. எதிர்வரும் நாட்களில் இன்னும் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறுகின்றார். இதற்கு செவிசாய்ப்பதாக அரசாங்கம் இல்லை. தான்தோன்றித் தனமாகவும் கர்வத்துடனும் செயற்படுவதாகவே தெரிகிறது.
அரசாங்கத்தை சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு எதிரணியினர் வலியுறுத்துவதாகவும் அரசாங்கம் அரசியல் ரீதியில் சிந்திப்பதால் அதனை தவிர்த்து வருவதாகவும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸர்ரப் கூறினார்
“அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. பசில் ராஜபக்ச நல்ல திட்டங்களுடனேயே தனது அமைச்சுக் கடமைகளை முன்னெடுக்கிறார். எடுத்த வேகத்தில் எதனையும் செய்துவிட முடியாது. ஆனால், அவரிடம் திடமான நம்பிக்கை இருக்கிறது. எனவே, தொடர்ந்தும் நான் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்” என்றும் முஸர்ரப் எம்.பி. குறிப்பிட்டார்.
“நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எல்லோரும் பொறுப்பு” என்று கூறிய முஸர்ரப் எம்.பி.யிடம், நிதி அமைச்சரை கொண்டு வந்தமைக்கு நீங்களும் பொறுப்புதானே என்று கேள்வி எழுப்பியதற்கு “இந்த பிரச்சினைகளுக்கு பாராளுமன்றமே முழப் பொறுப்பு என்ற நிலை தோன்றுமாயின் நானும் அதனை பொறுப்பேற்கத் தயாராகவே இருக்கிறேன்” என்றார். அரசாங்கத்திற்கான ஆதரவு தொடரும் என திடமாக கூறும் முஸர்ரப் எம்.பி. தொடர்ச்சியாக அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பதாகவும் கூறியிருக்கிறார்.
அத்தோடு, முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம். ஹரீஸ் கடந்த வாரம் கிழக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது கருத்து வெளியிட்டார். “எமது நாடு இப்போது எதிர்நோக்கியிருக்கின்ற பொருளாதார நெருக்கடி தீர்க்க்கப்பட வேண்டுமானால் இந்த நாடு அனைத்து சமூகத்தினரும் நிம்மதியாக வாழக்கூடிய ஒரு நாடாகவும் இனவாதமற்ற அரசாங்கமாகவும் மாற்றப்பட வேண்டும் என்கிற யதார்த்தம் உணரப்பட்டிருக்கிறது.”
“அரசு மீது சுமத்தப்பட்டிருக்கின்ற இனவாத சாயத்தை இல்லாமல் செய்வதற்காக சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளை உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்திருக்கும் கோட்பாடானது சிறுபான்மையினருக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை தோற்றுவிக்கும்” என்றும் ஹரீஸ் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
ஆக, முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்க தயாராகவே இருக்கின்றனர். இந்நிலையில், நாடு எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சினைகளுக்கும் இந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக் கூறவேண்டியவர்களே!
அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு பங்காளிக் கட்சிகள் தீர்மானித்திருக்கின்றன. இனவாத சிந்தனையுடைய விமலின் தரப்பும் உதய கம்பன்பிலவின் தரப்பும் வெளியேற்றப்பட்டிருக்கின்றன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெளியேறப்போவதாக அரசாங்கத்தை எச்சரித்துக்கொண்டிருக்கிறது. கட்சியாகவோ, தனி நபர்களாகவோ அரசாங்கத்துடன் இந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு செயற்பட பொது ஜன பெரமுனவினர் பின்வாங்கும் நிலையில் இவர்களே வலிந்துபோய் அரசாங்கத்தை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டிருப்பது வெட்கப்படவேண்டிய நிலை என்றே கூறவேண்டும்.
முஸ்லிம் தனித்துவ அரசியலை முதன்மைப்படுத்தி சுய நிர்ணய அரசியலை முன்னெடுத்த அஷ்ரபின் கொள்கை கோட்பாடு என்று கூறும் இவர்கள் இணக்க அரசியலையும் தாண்டி அடிபணியும் அரசியலையும் கூஜா தூக்கும் அரசியலையுமே முன்னெடுக்கின்றமை கவலைக்குரியதாகும். இந்த இக்கட்டான தருணத்திலாவது நாட்டின் தேசிய நலனை முன்னிறுத்திய தீர்மானங்களை எடுப்பதற்கு இந்த எம்.பி.க்கள் முன்வர வேண்டும். இன்றேல் நாட்டின் அழிவுக்கு துணைபோன பாவம் இவர்களை சும்மா விடாது.
No comments