Breaking News

கால்களைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்கிறோம்... ஜனாஸாக்களை எரிக்காதீர்கள் அதை கண்ணியமாக எங்களிடம் தாருங்கள் - சட்டத்தரணி ஹபீப் றிபான்

(எச்.எம்.எம்.பர்ஸான்)

இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் எனும் முஸ்லிம்களின் மத நம்பிக்கைக்கு
மதிப்பளித்து கொரோனா தொற்றினால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யத் தருமாறு அரசாங்கத்திடம் நாங்கள் வினயமாக வேண்டுகோளை விடுக்கின்றோம் என்று சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார்.

கொரோனா தொற்று காரணமாக மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை எரிக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலை வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

உண்மையில் ஜனாஸாக்களை எரிக்கின்ற போது எங்களது மனது அழுகின்றது, எங்களது கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது, எங்களால் தூங்க முடியவில்லை. இது எங்களுடைய மத உரிமை. அரசாங்கத்திடம் நாங்கள் வினயமாக கேட்கின்றோம் உங்களுடைய கால்களைப் பிடித்து வேண்டுகின்றோம் கடவுளுக்காக ஜனாஸாக்களை எரிக்காதீர்கள்.

நாங்கள் வணங்குகின்ற இஸ்லாம் மதமானது அது எங்களுடைய உரிமை. அரசியல் அமைப்பில் கூட ஒருவர் மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை மீறுகின்ற போது நாங்கள் உயர் நீதி மன்றத்தில் வழக்குகளைக் கூட தாக்கல் செய்யலாம்.

இன்றும் சகல நாடுகளிலும் கொரோனாவில் மரணிக்கும் நபர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்கின்றனர். உலக சுகாதார ஸ்தாபனம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முடியும் என்று கூறி இருக்கிறது அவ்வாறு இருக்கின்ற போது இலங்கையில் மாத்திரம் ஏன் எரியூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறான செயற்பாடுகள் கடும் வேதனையாக இருக்கிறது எங்களுடைய அரசியல்வாதிகள் எல்லாப் பக்கங்களிலும் இதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

இலங்கையில் பல்வேறு பக்கத்திலும் சிங்களவர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது நாங்கள் அரசாங்கத்துக்கு எதிராக செய்கின்ற ஒரு செயற்பாடு அல்ல எங்களது உரிமைகளை கேட்கின்றோம். கெஞ்சிக் கேட்கின்றோம் உங்களுடைய கால்களில் விழுந்து கேட்கின்றோம் இறந்த உடல்களை அடக்குவதற்கு கண்ணியமாக எங்களிடம் தாருங்கள் என்று அவர் தெரிவித்தார்.



No comments