JobVibe.lk - Sri Lanka Job Portal

ரவூப் ஹக்கீமுக்கெதிரான அலி சப்ரியின் கண்டனம் அநாகரீகமானது.

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரீ, ரவூப் ஹக்கீம் மீது கண்டனத்தை வெளியிட்டதை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக இருந்தது “இன்றைய தேர்தல் காலத்தில் அரசாங்கம், ஜனாதிபதி மீதும் வெறுப்பைக் கக்குகின்ற அநாகரீக செயலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.”

ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்ட தேர்தல் பிரசாரங்களில் என்ன பேசினார்? அவை கண்டிக்கப்பட வேண்டியது தானா?

ஜனாதிபதித்தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்காதவர்களை அடக்கியாளும் இறுமாப்போடு, ஆளுந்தரப்பு ஈடுபட்டு வருவதாகக்கூறினார் என மேற்கோள் காட்டியே இக்கண்டனம் அலி சப்ரீயால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறியிருப்பாராக இருந்தால், அவை வரவேற்க வேண்டியதாகவே இருக்கிறது. ஏனெனில், இந்த அரசாங்கத்திற்கு அச்சப்படாது, அவர்களின் அநீதிகளைச்சுட்டிக்காட்டும் துணிச்சல்மிக்கவராகக் காணப்படுவதனால், ஜனாதிபதித்தேர்தல் வெற்றியின் பின்னரான அரசாங்கத்தின் செயற்பாடுகள் தனக்கு வாக்களிக்காத மக்களைப் புறக்கணித்ததாகவே அமைந்ததை யாரும் மறப்பதற்கில்லை.

முஸ்லிம்களுக்கெதிரான இனவாத சக்திகளைத் திருப்திபடுத்துவதாகவே ஆட்சிக்கு வந்த அரசாங்கம் செயற்பட்டது. தங்கள் தரப்பில் இருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரேயேனும் அமைச்சரவைக்கு நியமிக்காது, முஸ்லிம் சமூகத்தைப் புறக்கணித்தது.

ஆளுந்தரப்பு முக்கிய அமைச்சர்கள் முஸ்லிம் சமூகத்தின் மீதான வெறுப்புகளை ஏற்படுத்தும் இனவாதப் பேச்சுக்களைப் பேசிய போது, அரசாங்கம் மௌனம் காத்ததை யாரும் மறக்கவில்லை.

கொவிட்19 தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் இந்த அரசாங்கம் நடந்து கொண்டது என்ன? ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள், இந்த அரசாங்கத்தின் பிரதமரோடு கலந்துரையாடிய போது, இவைகள் தொடர்பாக ஆராய்வதற்காக நிபுணத்துவக்குழு அமைக்கப்படுமென்று கூறப்பட்டாலும், அவை அமைக்கப்படாது, தொடர்ந்தும் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டதை ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரீ மறந்து விட்டாரா? இவைகள் பழிவாங்களில்லையா?
எனவே, இந்த அரசாங்கம் தங்களுக்கு வாக்களிக்காதவர்களை அடக்கியாளும் இறுமாப்போடு நடந்து கொண்டதை இன்னும் அதிகமாகப் பட்டியலிட்டுச்சொல்லலாம். இவைகளை முஸ்லிம் சமூகம் மறக்கவில்லை.

எனவே தான் அரசியல் முதிர்ச்சி கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அந்த அரசாங்கத்தின் அடக்குமுறைகளை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி ஜனநாயக வெற்றியூடாக நல்ல அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

ரவூப் ஹக்கீமின் செயற்பாடுகளைக் கண்டிப்பதை விடுத்து, தான் சார்ந்திருக்கும் அரசாங்கத்திடமிருந்து முஸ்லிம் சமூகத்திற்கெதிரான செயற்பாடுகளைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும். ஜனாஸா எரிப்பு விடயத்தில் நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கவும்.

ஜனாதிபதியின் நல்ல செயற்பாடுகளை ரவூப் ஹக்கீம் பாராட்டத்தவறியதுமில்லை. அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளைச் சுட்டிக்காட்டவும் தவறவில்லை. ரவூப் ஹக்கீமைத் தோற்கடித்து, தங்களுக்கு தலையாட்டும் பொம்மைத் தலைவர்களை முஸ்லிம் சமூகத்திலிருந்து உருவாக்கும் சதிகளும் இக்கால கட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதை இவ்வாறான கண்டனங்களும் உணர்த்துகின்றன.

முஸ்லிம் சமூகம் சிந்தித்துச்செயற்படும் மிக முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறோம். எமது தலைமைத்துவங்களை, குறிப்பாக, ரவூப் ஹக்கீமை இனவாதச்சக்திகள் அழிப்பதற்கு துடித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், நாம் நமது தலைமைத்துவங்களைப் பாதுகாப்பதற்கு உறுதியாக இத்தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத்- ஓட்டமாவடி



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال