காத்தான்குடி, ஏறாவூர் படுகொலைகள் போன்று சாய்ந்தமருது படுகொலை பற்றி வரலாற்றில் பெரிதாக பேசப்படுவதில்லை.
31.03.1988 அன்று காலை 11 மணியளவில் திடீரென துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் பெருமளவில் கேட்டது. மக்கள் ஓலங்கள், இரைச்சல்களுடன் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர். வீட்டைவிட்டு வெளியேசென்று பார்த்தபோது, மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது தெற்குப் பக்கம் உள்ள மக்கள் வெள்ளம் போன்று உடுத்த ஆடையுடன் ஓடிக்கொண்டிருந்தனர்.
அதேநேரத்தில், சாய்ந்தமருது அல்-ஹிலால் வீதியில் உள்ள தக்வா பள்ளிவாசலின் ஒலிபெருக்கி மூலமாக மக்கள் அனைவரும் பள்ளிவாசலுக்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டது. இது ஒரு ஆபத்தானதும், முட்டாள்தனமானதுமான அழைப்பு என்று அப்போது எவருக்கும் புரியவில்லை. ஆனால் பெரும்பாலான மக்கள் அந்த அழைப்பை கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் சிலர் பள்ளிக்கு சென்றனர்.
சாய்ந்தமருது, மாளிகைக்காட்டு மக்கள் அனைவரும் கல்முனை சாஹிராக் கல்லூரியை நோக்கிச் சென்று அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.
அதேநேரம் சாய்ந்தமருதுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் பலர் பரவலாக சுட்டுக்கொண்டு வந்தனர். அத்துடன், அல்-ஹிலால் வீதியில் உள்ள குறித்த தக்வா பள்ளிவாசலுக்குள் நுழைந்த ஆயுததாரிகள், பள்ளிக்குள் இருந்தவர்கள் மீது சாரமாரியான துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தனர். ஒலிபெருக்கி மூலமான அழைப்பின்பேரில் பள்ளிக்குச் சென்ற அப்பாவிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி துடியாய் துடித்து இரத்த வெள்ளத்தில் மூழ்கினர்.
இந்த தாக்குதலில் பள்ளிவாசலுக்குள் பத்துப் பேரும், வெளியே ஏழு பேர்கள் மொத்தமாக 17 பேர் கொலை செய்யப்பட்டதுடன், ஏராளமானவர்கள் காயங்களுக்குள்ளாகினர்.
தாக்குதல் நடத்தியவர்கள் யார் ?
காரைதீவில் இருந்துவந்த Three Star அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தினர். இந்திய உளவுத்துறையான RAW வின் நேரடிப் பங்களிப்புடன், EPRLF, TELO, PLOTE ஆகிய மூன்று இயக்கங்களையும் ஒன்றிணைத்து அப்போது உருவாக்கப்பட்டதுதான் Three Star என்ற அமைப்பாகும். இது இந்தியப் படையின் கட்டுப்பாட்டின்கீழ் செயற்பட்டது.
இந்த தாக்குதலை நடத்தும்போது இந்திய படையினர் காரைதீவில் இருந்தனர். ஆனால் அவர்கள் உதவிக்கு வரவில்லை, இந்திய படையினரின் அனுசரணையுடன் தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்போது பேசப்பட்டது.
தாக்குதல் நடத்தப்பட்டு தாமதமாகிய பின்புதான் பொலிசார் உதவிக்கு வந்தனர். அப்போது பொலிஸ் அதிகாரியாக இருந்த திரு. கஸ்ஸாலி என்பவர் இந்த விடயத்தில் உதவியதாக பேசப்பட்டார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் – முஸ்லிம் உறவுகள் பாதிக்கப்பட்டிருந்த காலத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் முக்கிய விடையம் என்னவென்றால், இந்த தகுதல் நடைபெற்றபோது முஸ்லிம் மக்களிடம் ஒரு சொட்கண் துப்பாக்கிகூட இருக்கவில்லை.
ஏனெனில் பகல் நேரத்தில் மாளிகைக்காட்டையும் தாண்டி சாய்ந்தமருது மத்திய பகுதி வரையிலும் ஊடுருவி அப்பிரதேசங்களில் உள்ள மக்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, ஆயுததாரிகள் அப்பிரதேசத்தை பல மணிநேரம் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் அவர்களை எதிர்த்து ஒரு துப்பாக்கி வேட்டுக்கள் கூட எழும்பவில்லை. அதாவது அவர்களை எதிர்ப்பதற்கு ஆயுதமோ, வேறு எந்தப் பலமோ அப்போது எவரிடமும் இருக்கவில்லை. பொலிசார் வரும்வரைக்கும் பாதுகாப்பற்ற நிலையில், ஒவ்வொருவரின் உயிரும் ஊசலாடிக்கொண்டிருந்தது.
இந்த தாக்குதலை வெறும் உயிரிழப்பாக மாத்திரம் எண்ணவில்லை, அது கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகத்தின் மனோநிலையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
அதாவது,
👉இந்தியப் படையினரை நம்பவே முடியாது அத்துடன், பொலிசார் வரும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கவும் முடியாது.
👉எல்லைப் பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்க வேண்டும்.
👉இளைஞர்கள் பாதுகாப்புக் குழுக்களில் ஈடுபடுத்தப்படல் வேண்டும்.
👉பாதுகாப்புக்காக ஆயுதங்கள் அவசியமாகும். ஆயுதங்களை எவ்வாறு பெறுவது என்ற விவாதம் ஏற்பட்டது.
👉தமிழ் ஆயுத இயக்கங்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் உள்ள நம்பிக்கை முற்றாக இழந்தது.
இந்த தாக்குதல்தான் பின்னாட்களில் முஸ்லிம் ஊர்காவல் படை, மற்றும் ஜிஹாத் என்று அழைக்கப்பட்ட ஆயுதக் குழுக்களின் அவசியமான மற்றும் நியாயப்படுத்தலுக்கான காரணியாக வரலாற்றை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
தொடரும்............
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
