(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையினர் கற்பிட்டி, ஈப்பான்தீவு கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (30) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற ஒன்பது லட்சத்து முப்பத்தைந்தாயிரம் (935,000) மருந்து மாத்திரைகளுடன் டிங்கி படகு ஒன்றையும், சந்தேகநபர் ஒருவரையும் கடற்படையினர் கைது.செய்துள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையகத்தைச் சேர்ந்த இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவால், கற்பிட்டி ஈப்பான்தீவு கடற்பகுதியில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அக்கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகை ஆய்வு செய்தபோது, இவ்வகையில் கொண்டு செல்லப்பட்டு வந்த மருந்து மாத்திரைகளின் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கற்பிட்டி, குரக்கன்ஹசேனை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் டிங்கி படகு மற்றும் மருந்து மாத்திரை தொகுதி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





