பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய சிறுவர் மாதிரி சந்தை நிகழ்வு இன்று (02) பாடசாலை அதிபர் எம்.எல். நிஜாம்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டார்.
நிகழ்வில் உரையாற்றிய அவர், அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டம் 95% இற்கும் அதிகமான சித்தி வீதத்தைப் பெற்று கோட்டத்தின் பாடசாலைகளில் முதலிடத்தை பெற்றமைக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்தில் கல்வி அறிவு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்பதையும், வியாபாரத்தை மட்டும் நம்பி இருக்க முடியாது என்பதையும் அவர் வலியுறுத்தினார். மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்றும், உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டு தொழில்சந்தைகளிலும் வேலை வாய்ப்புகளை பெறக்கூடிய வகையில் கல்வி அமைவாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 34வது இடத்தில் இருந்த பாடசாலை, இவ்வருடம் 2ம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டதற்காக அதிபர் எம்.எல். நிஜாம்தீன் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.
சிறுவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல சிறுவர் கடைத் தொகுதிகள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம். தாஹிர், பாடசாலை அதிபர்களான ஏ.ஆர்.எம். நியாஸ், ஏ.எல்.எம். இஸ்மாயில், எம்.ஏ. அஸீஸ், எஸ்.ஏ. றமீஸ், ஏ.யூ.எம். நளீம் மௌலவி, எல்.டி.எம். சாதிக்கீன், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்கள் ஆர். ஜுனைட், பீ.எம். சித்தீக், எம்.டி. கான் நூரியா பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம். ஹுசைன், பாடசாலை பிரதி அதிபர் ஏ.எல். அன்சார், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஏ.ஜி. அஸ்லம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
-- ஊடகப்பிரிவு






