JobVibe.lk - Sri Lanka Job Portal

பாடசாலைக் கல்வி அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் எனில் சுய கற்றல் என்கின்ற இலக்கை மாணவர்கள் அடைய வேண்டும்

நூருல் ஹுதா உமர்

கடந்த காலங்களில் பல்வேறு காரணிகளினால் பாடசாலைகளின் கட்டடக் கதவுகள் மூடப்பட்டன. அதனால் பல்வேறு விளைவுகளை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன. விசேடமாக மாணவர்கள் பாடசாலைகளில் அடைய வேண்டிய தேர்ச்சி மட்டங்களில் பாரிய விளைவுகளை அவை உண்டு பண்ணியுள்ளன. பாடசாலைக் கல்வி அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் எனில் சுய கற்றல் என்கின்ற இலக்கை மாணவர்கள் அடைய வேண்டும் என அக்- அஸ்ஸபா கனிஷ்ட வித்தியாலய அதிபர் எம்.ஜே.எம். அன்வர் நௌஷாத் தெரிவித்தார்.


அக்கரைப்பற்று கோட்டக் கல்வி பணிமனைக்கு உட்பட பள்ளிக்குடியிருப்பு  அஸ்-ஸபா கனிஷ்ட கல்லூரியின் 2022 ஆம் ஆண்டிற்கான முப்பெரும் விழா நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,


மாணவர்களுக்கு ஆன்லைன் கற்பித்தல் சாதகமான விளைவுகளை கொடுக்க வில்லை. கிராமப்புறங்களில் ஆன்லைன் வகுப்புகளுக்கு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை மிகப் பெரிய சவாலாகும். அது மாத்திரமின்றி, கட்டணம் செலுத்த கூடிய வகுப்புகளை அடைவது மற்றைய சவாலாகும். சிறுவர் கல்வியில் தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரைக்குமான வகுப்புகள் மாணவர்களின் தேர்ச்சியை இலக்காக கொண்டுள்ளன. வகுப்பறை செயற்பாடுகள் அதற்கு மிக அவசியமான ஒன்றாகும். இருப்பினும் கற்றல் உதவியாளர் இன்றி வகுப்பிலுள்ள எல்லா மாணவர்களும் இலக்கை அடைதல் சிரமமான காரியம்.


எனவே மாணவர்களின் சுற்றுச் சூழல், வாழிடம் என்பன அதற்கு உரிய இடத்தை வழங்க வேண்டும். பெற்றோர், சகோதர உறவினர்கள் கற்றல் உதவியாளர்களாக மாற்றம் பெற வேண்டும். அவ்வாறு மாற்றம் ஒன்று நிகழும் பட்சத்திலேயே மாணவர்களுக்கு தேவையான கல்வியை இடையூறின்றி வழங்க முடியும். அதன் மூலமாகவே நாடு இப்போது எதிர்பார்க்கும் பொருளாதார சிக்கல் நிலையில் இருந்தும் விடுபட முடியும்.  அத்துடன் கட்டாயமான பாடங்களில் ஒன்றாக தொழில் கல்வி உள்வாங்கப் படல் அவசியமானதாகும்.


தொழில் கல்வியை பொறுத்த மட்டில் நாம் மொழிக் கல்விக் கற்கைகளுக்கு (Medium Education) முக்கியம் வழங்க வேண்டியுள்ளது.  நாட்டின் வருமானம் பெருமளவில் வெளிநாட்டு வேலையாளர்களில் தங்கியுள்ளது. அதிலும் பெருமளவிலான எண்ணிக்கையானோர் மத்திய கிழக்கு நாடுகள் நோக்கி இன,மத,சாதி, பாகுபாடுகள் இன்றி இலகுவில் நகர்வதால் ஆரம்பக் கல்வி தொடக்கம் தொழிற் கல்வியாக ஆங்கிலத் துடன் , அரபு மொழியையும் உள்ளடக்க வேண்டியுள்ளது. இதன் மூலம் தொடர்பாடல் ஆற்றல் உள்ள தொழிலாளர்களை உருவாக்கி வெற்றி பெற முடியும். அத்துடன் சீன, ஜப்பான், கொரியா மொழிப் பாடங்களும் அவசியமானதாகும்.


இவ்வாறான இலக்குகளை உள்ளடக்கிய மறுசீரமைப்பு கல்வியின் கட்டாயத் தேவையாகவுள்ள நிலையில் , மாணவர்களின் எதிர்காலம் குறித்து அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஆசிரியர்களின் பதவி நிலை குறித்தும் அரசு அவதானம் கொள்ள வேண்டும்.


ஆசிரிய நியமனம் பெரும் ஒருவர் ஆசிரியராக வே மரணிக்கும் வரை செயற்படுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நமது கல்விச் சேவையில் உள்ளது. துறை சார் நிபுணத்துவம் இலங்கை கல்விச் சேவையில் உள் வாங்கப் படுவதில்லை. சாதாரண போட்டிப் பரீட்சைகள் மூலமே தீர்மானிக்கப்படுகின்றன. கல்வியை முதலீடாக கொண்டு விளைவுகளை எதிர்பார்க்கும் ஒரு நாடாக எமது நாடு வெற்றி பெற வேண்டும் எனில், காலத்துக்கு தேவையான நிஜமான மாற்றங்களை உள்வாங்க தயாராக வேண்டும்- என்றார்






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال