JobVibe.lk - Sri Lanka Job Portal

சமையல் எரிவாயுவை பெற வெயிலில் நீண்டவரிசையில் காத்திருந்த பொதுமக்கள் : மோசடி செய்து மக்கள் பணத்தை சுரண்டும் எரிவாயு முகவர்கள் !

(நூருல் ஹுதா உமர், பாறூக் ஷிஹான்)

நாட்டில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக சமையல் எரிவாயுவை பெற மக்கள் கடுமையான நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர். அதனடிப்படையில் இன்று காலை முதல் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் சமையல் எரிவாயு லிற்றோ கேஸ் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்டது. தேவையுடைய மக்கள் வெயிலையும் கவனத்தில் கொள்ளாது நீண்டவரிசையில் நின்று எரிவாயுவை பெற்றுச்செல்கின்றனர். 


அம்பாறை மாவட்ட விற்பனை விலை (12.5kg) 4970 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தும் இங்கு ஒரு 12.5kg சமையல் எரிவாயுவை பெற மக்களிடமிருந்து 5000 ரூபாய் அறிவிடப்பட்டது. இது தொடர்பில் சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வியெழுப்பிய போது மக்களிடம் மிகுதியை கொடுக்க எங்களிடம் சில்லறை இல்லையென்று பிராந்திய விற்பனை முகாமையாளர் என அடையாளப்படுத்திய நபர் தெரிவித்தார். மக்களிடம் இதுதான் விலை என்று அறிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பலத்த சலசலப்பு உருவாகியது. 


மிகுதிப்பணம் கேட்டால் சில்லறை கொண்டுவர அறிவுறுத்தப்படுகின்றோம். சில்லறை வைத்திருக்க வேண்டியது வியாபாரிகள் தானே. மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என மக்கள் புலம்புவதை காணமுடிகிறது. 


மக்களிடம் இருந்து ஒருவருக்கு 30 ரூபாய் வீதம் பகல் கொள்ளையிடப்படும் இந்த பணத்தினால் மொத்தமாக ஒரு பாரிய தொகை இறுதியில் சேரும் என்றும், ஏற்கனவே விலை அதிகரித்திருப்பதை தாங்கமுடியாமல் திணறும் நாங்கள் இப்போது வெயிலில் காத்திருந்து பகல் கொள்ளை வழங்கவேண்டி உள்ளது என்றும் தெரிவித்த மக்கள் அத்தியாவசிய தேவையறிந்து இந்த சமையல் எரிவாய்வை 10,000 கொடுத்தும் வாங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கின்றனர். மிகுதியாக உள்ள அந்த 30 ரூபாய்க்குமாக பிஸ்கட் போன்ற மாற்று  பொருட்களையாவது வாங்கி மிகுதிப்பணத்திற்கு பகரமாக வழங்கியிருக்க முடியும். 


இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபைக்கு பொதுமக்களினால் தொலைபேசியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை மக்கள் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார்கள்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال