JobVibe.lk - Sri Lanka Job Portal

ஆபத்தை உணர்ந்து சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக கடைப்பிடியுங்கள்; கல்முனை முதல்வர் றகீப் உருக்கமான வேண்டுகோள்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற இந்த அபாய சூழ்நிலையில், கல்முனை மாநகர வாழ் மக்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் சுகாதார வழிமுறைகளை இறுக்கமாகக் கடைப்பித்து, கொரோனா ஒழிப்புக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இவ்வேண்டுகோளை வலியுறுத்தி அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;


எமது அயல் நாடான இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி, தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. அங்கு நாளாந்தம் பல்லாயிரம் மக்கள் செத்து மடிகின்றனர். தற்போது இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரினதும் மரணிப்போரினதும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்போது நாமும் அபாயமான கட்டத்தை நெருங்கி விட்டோம் என்பதை நாட்டு நிலைமைகள் உணர்த்துகின்றன.


கொரோனாவின் இந்த மூன்றாவது அலைத் தாக்கத்தில் இருந்து எமது நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. சுகாதாரத்துறையினரும் பொலிஸ் மற்றும் முப்படையினரும் பாரிய அர்ப்பணிப்புடன் கொரோனா ஒழிப்புக்காக போராடி வருகின்றனர். முடக்கம், தனிமைப்படுத்தல், பயணக்கட்டுப்பாடு என்று எல்லா நடவடிக்கைகளும் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளே. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வெற்றியளிக்க வேண்டுமாயின் மக்களின் ஒத்துழைப்பே அடிப்படையானது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.


தமது குடும்பத்தில் அல்லது உறவினர்களில் ஒருவர் வைரஸ் தொற்றுக்குள்ளாகி, உயிரிழந்த பின்னர் கைசேதப்படுவதில் பயனில்லை. இது விடயத்தில் இளைஞர்கள் அதிக கரிசனை செலுத்த வேண்டும். நீங்கள் எவ்வித அவசியத் தேவையுமின்றி வெளியில் நடமாடி விட்டு, கொரோனா வைரஸ் காவிகளாக வீடு செல்கிறீர்கள் என்பதையும் அதனால் உங்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தொற்றுக்குள்ளாகக் கூடிய அபாயம் இருப்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.


ஆகையினால் கல்முனை மாநகர வாழ் மக்கள் எல்லோரும் சுகாதாரக் கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடித்து, தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க முன்வர வேண்டும் என அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன். அந்த அடிப்படையில் அவசியத் தேவைக்கு மாத்திரம் குடும்பத்தில் ஒருவர் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்வதுடன் வேலைகளை முடித்துக் கொண்டு அவசரமாக வீடு திரும்பி விடுங்கள். எப்போதும் கைகளைக் கழுவிக்கொள்ளுங்கள். சமூக இடைவெளியைப் பேணிக்கொள்ளுங்கள். தத்தம் வீட்டில் இருப்பதே பாதுகாப்பு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


இதன் மூலம் தம்மையும் குடும்பத்தினரையும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதுடன் சட்ட நடவடிக்கைகளில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும்- என கல்முனை மாநகர முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال