JobVibe.lk - Sri Lanka Job Portal

கொரோனா வைரஸினால் மரணிக்கின்ற முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது வேதனையளிக்கின்றது - உயர் நீதிமன்ற சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா கவலை தெரிவிப்பு

கலிமா சொன்ன முஸ்லிம் ஒருவரின் ஜனாஸா என்பது இஸ்லாமிய சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய கோட்பாடாகும். இந்த நிலையில் எமது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கியதாக கூறப்படுகின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்றமை முஸ்லிம்கள் மத்தியில் ஆழ்ந்த துக்கத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. என முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது இத்தாலி, இங்கிலாந்து மற்றும் ஜரோப்பிய கிழக்கு நாடுகளில் கொரானா தொற்றுக்காரணமாக மரணித்தவர்களின் ஜனாஸா, தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது. மட்டுமின்றி முஸ்லிம் நாடுகளில் பலவற்றிலும் இவ்வாறான இறப்புகள் சமீபத்திய நாட்களில் அதிகமாக சம்பவித்து வருகிறது. அந்த ஜனாஸாக்கள் இஸ்லாமிய சடங்குகள் செய்யப்பட்டு தொழுகையின் பின்னர் ஆழமான குழிகளில் நல்லடக்கம் செய்யப்படும் நிலை இருக்கின்ற போதும் சிறியளவிலான நாடான இங்கு மட்டும் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருப்பது ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை சட்டத்தின் படி ஒரு பிரஜைக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமையை கூட மறுக்கின்ற இந்த கொடூரமான செயலானது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் அவமதித்த ஒரு செயலாகவே கருதவேண்டி உள்ளது. 

முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் அரசு இனவாதத்துடன் செயற்படுவது கவலையளிக்கின்றது.

நம்நாட்டில் நடைபெற்று வருகின்ற இந்த விடயம் முஸ்லிம் மக்களின் மனங்களில் பெரும் வருத்தத்தையும் கண்ணீர் சிந்தும் நிலையையும் ஏற்படுத்தி உள்ளது.
எனினும் யாராக இருந்தாலும் எமது இஸ்லாமிய மார்க்க கோட்பாட்டுகளுக்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட அனுமதிக்க முடியாது. இவ்வாறான செயல்கள் உடன் களைந்தெறியும் வழிமுறைகளை நாம் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் அவசியமானதாகும்.

உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்வதில் பிரச்சினை இல்லை என சுற்றறிக்கை வெளியிட்டுள்ள போதும் இலங்கை அரசு சர்வாதிகாரியாக இவ்விடயத்தில் செயற்படுவது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் இனவாதிகளை திருப்தி படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலே ஆகும். இது விடயம் தொடர்பில் அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளுடனும் கலந்துரையாடி இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிகளை செய்து வருகின்றோம்.

இதேவேளை, இவ்வாறான நிலை தொடருமானால் தொற்று ஏற்பட்டு தாம் மரணித்தால் தனது ஜனாஸா எரியூட்டப்பட்டுவிடும் என பயந்து
கொரானா தொற்றுக்குள்ளாகும் மக்கள் தமது நோய் தொற்றை மறைக்கும் அபாய நிலை எமது நாட்டில் ஏற்படலாம். என்பதை கவனத்தில் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் கொரோனா தொற்றினால் காலமான முஸ்லிம்களை இறைவன் பொருந்திக்கொண்டு உயரிய சுவர்க்கமான "ஜன்னத்துல் பிர்தௌஸ்" எனும் சுவர்க்கத்தை வழங்க வேண்டும் என இறைவனிடம் கையேந்தி பிராத்திக்கிறேன். என தெரிவித்துள்ளார்.



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال