ஈரானின் உச்ச தலைவர் அஆயதுல்லாஹ் கமேனியின் ஜனாஸா நல்லடக்க நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஈரான் பயணமாகியுள்ளார்.
ஈரான் அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில், நேற்று (ஜூலை 02) வியாழக்கிழமை அவர் தெஹ்ரான் நோக்கிப் பயணித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகள் ஈரான் மீது மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில், உச்ச தலைவர் கமேனி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து பிராந்தியத்தில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக, அவரது ஜனாஸா நல்லடக்கம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
தற்போது, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்று வரும் தற்காலிக அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, பல நாட்கள் நீடிக்கக்கூடிய வகையிலான பிரம்மாண்டமான ஜனாஸா ஊர்வலத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முக்கிய நிகழ்விலேயே ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ளவுள்ளார்.
அமெரிக்க - இஸ்ரேல் போரின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் கிரியைகளுக்காக, 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தெஹ்ரானில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, இது ஈரானிய வரலாற்றில் மிகப்பெரிய கூட்டமாக இருக்கும்.
தங்கள் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, நாடு முழுவதிலுமிருந்து பெருந்திரளான மக்கள் ஏற்கனவே தலைநகரை நோக்கி வந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிராந்தியத்தில் வலுவான அரசியல் செல்வாக்கைச் செலுத்திய இந்த சக்திவாய்ந்த தலைவரின் மரணத்தால் ஒட்டுமொத்த ஈரானிய மக்களும் ஆழ்ந்த துக்கத்தில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
பிராந்தியத்தில் கடுமையான இராணுவ பதற்றம் நிலவினாலும், இறுதிச் சடங்கு சிறந்த முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தெஹ்ரான் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக நாட்டின் பாதுகாப்புப் படைகள் உறுதிப்படுத்துகின்றன.
முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனிக்கான இறுதி ஊர்வலம் மற்றும் நினைவேந்தல் நாளை (04) தலைநகர் தெஹ்ரானில் தொடங்க உள்ளது. அரசு மரியாதையுடன் கூடிய இறுதிக் கிரியைகள் பல நாட்கள் நீடித்து, ஜூலை 9 ஆம் திகதி ஜனாஸா அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, முன்னாள் உச்ச தலைவரின் இறுதிக் கிரியைகளை அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் ஜூலை 09 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த துக்க காலத்தில் நாடு முழுவதும் சிறப்பு மத வைபவங்கள் மற்றும் தொடர்ச்சியான பொது அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று ஈரானில் இருந்து வரும் அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.
